Sep 28, 2017 07:14 PM

பிக் பாஸில் இருந்து பிந்து மாதவி வெளியேற்றம்!

பிக் பாஸில் இருந்து பிந்து மாதவி வெளியேற்றம்!

பிக் பாஸ் 100 வது நாளுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இன்று ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில், சினேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்பது உறுதி என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

அதே சமயம், ஹரிஷ் கல்யாண் அல்லது ஆரவ் இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்றும் தெரிவித்திருந்தோம். ஆனால், அவர்கள் இருவரையும் வெளியேற்றாத பிக் பாஸ், 96 வது நாளில் நடிகை பிந்து மாதவியை வெளியேற்றியுள்ளார்.

 

ஐந்து போட்டியாளர்களுக்கும் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் அதிபுத்திசாலி, சுட்டி, பண்பானவன், காதல் மன்னன், உழைப்பாளி என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்ட பிறகு, ஐந்து பேரில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட உள்ளார், என்று பிக் பாஸ் அறிவித்ததும், அந்த ஒருவர் யார்? என்ற எதிர்ப்பார்ப்போடு, பெரும் சோகத்திலும் ஐந்து பேரும் ஆழ்ந்தார்கள்.

 

பிறகு பிக் பாஸ் வீட்டு கார்டனில் உள்ள சிறு மேடையில் ஐந்து பேரையும் ஏறி நிற்கச் சொன்ன பிக் பாஸ், அவர்களை ஒவ்வொருவராக சேஃப் என்று கூறிவந்த நிலையில், இறுதியாக ஹாரிஸ் மற்றும் பிந்து மாதவி எஞ்சியிருக்க, ஹாரிஸும் சேஃப் என்று அறிவித்துவிட்டார். பிறகு எஞ்சியிருக்கும் பிந்து மாதவியை தனது பொருட்களை பேக் செய்துகொண்டு கிளம்புமாறும் கூறிவிட்டார்.

 

பிந்து மாதவி வெளியேறினாலும், தைரியமாக கண்ணீரை வெளிக்காட்டாமல் இருக்க, அவரைக் கட்டிபிடித்து சினேகன் வைத்த ஒப்பாரி தான் ரொம்ப ஓவராக இருந்தது.

 

100 நாட்கள் முடிய இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் போட்டியில், ஹாரிஸ் கல்யாண், சினேகன், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஆரவ் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.