Sep 29, 2017 04:47 AM

நடிகர் சிவாஜியை அதிமுக அரசு அவமானப்படுத்துகிறது - குஷ்பு காட்டம்

நடிகர் சிவாஜியை அதிமுக அரசு அவமானப்படுத்துகிறது - குஷ்பு காட்டம்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது. இதன் திறப்பு விழா சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 

 

இதற்கிடையே, மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்காமல், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார், என்று அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிவாஜி கணேசனின் குடும்பத்தார் சார்பில் நடிகர் பிரபு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, தமிழக அரசு சிவாஜி கணேசனை அவமானப்படுத்துவதாக, கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் திலகத்தை தமிழ்நாடு அரசு அவமானப்படுத்துகிறது. இந்தியத் திரையுலகத்திற்கு, முக்கியமாக தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மேதை அவர். தமிழக முதல்வரே..  துணை முதல்வரே.. தமிழக அரசே.. உங்களுக்கு மேதைகளை மதிக்கத் தெரியாவிட்டால், நடிகர் திலகத்தை அவமானப்படுத்தி உங்கள் அதிகார அணுகுமுறையை காட்டாதீர்கள்..” என்று தெரிவித்துள்ளார்.