Sep 29, 2017 11:22 AM

’விழித்திரு’ படத்தில் பார்வையற்றவராக நடிக்கும் வெங்கட் பிரபு!

’விழித்திரு’ படத்தில் பார்வையற்றவராக நடிக்கும் வெங்கட் பிரபு!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் செளந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு இப்படத்தை வெளியிடுகிறார்.

 

விதார்த், கிருஷ்ணா ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ள இப்படத்தில் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, தம்பி ராமையா, அபிநயா மற்றும் பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். மேலும், இப்படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார்.

 

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல பாடகர் சத்யா இசையமைத்திருக்கிறார். பிரவின் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ள இப்படம் ஒரே இரவில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றோடு ஒன்று சம்மந்தப்படாத நான்கு வெவ்வேறு கதைகளும், ஒன்றோடு ஒன்று சம்மந்தப்படும் விதத்தில் திரைக்கதை வடிமைக்கப்பட்டுள்ள இப்படம் படு விறுவிறுப்பாக நகரும் என்று இப்படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

 

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வெங்கட் பிரபு, இப்படத்தில் நான் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை அதை சஸ்பென்ஸாக வைத்திருந்தோம். படம் 6 ஆம் தேதி வெளியாவதால் சொல்கிறேன். நான் ஒரு பார்வையற்ற அப்பாவாக நடித்திருக்கிறேன். சாரா எனது மகளாக நடித்திருக்கிறாள். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் நடைபெற்றது. இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்துவது ரொம்ப சிரமாமான விஷயம் என்பதோடு, அதிகமாக செலவும் ஆகும். இந்த படத்திற்காக மீரா கதிரவன் ரொம்ப அதிகமாகவே உழைத்திருக்கிறார். அவரது உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.” என்றார்.

 

இயக்குநர் மீரா கதிரவன் பேசும் போது, “இந்த படத்தின் மூலம் எனக்கு ஒரு மந்திர சாவியை கொடுத்தவர்கள், இதில் நடித்தவர்கள் தான். எனக்கு பெரிதும் ஒழ்த்துழைப்பு கொடுத்து அனைவரும் நடித்தார்கள். இந்த படம் காலதாமதன் ஆனதற்கு காரணம், படப்பிடிப்பு இரவு நேரத்தில் நடைபெற்றது தான். பகலில் 10 மணி நேரம் வேலை செய்தால், அதே வேலையை இரவு நேரத்தில் நான்கு மணீ நேரம் வரை தான் செய்ய முடியும். அதேபோல், இரவு நேரத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்குவது என்பது ரொம்ப பெரிய கஷ்ட்டம். தினமும் போலீசாரிடம் படப்பிடிப்பு குறித்து விளக்கு சொல்வதற்கே இரண்டு மணி நேரம் போய்விடும். அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்குவோம். பிறகு, நான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சோர்வடைந்து விடுவார்கள். இப்படிப்பட்ட கஷ்ட்டங்கள் அனுபவித்து தான் இந்த படத்தை நான் தயாரித்து இயக்கினாலும், தற்போது படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது.” என்றார்.

 

தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடும் விடியல் ராஜு பேசுகையில், “இந்த படம் ரிலீஸுக்கு காலதாமதம் ஆனாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ற படமாக உள்ளது. படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயமும் இப்போதைக்கு டிரெண்ட்டில் உள்ள விஷயம் என்பதால், இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்று தெரிவித்தார்.