Sep 30, 2017 05:53 AM

தன்ஷிகாவால் பற்றிய தீ - கொழுந்துவிட்டு எரியும் கோடம்பாக்கம்!

தன்ஷிகாவால் பற்றிய தீ - கொழுந்துவிட்டு எரியும் கோடம்பாக்கம்!

’விழித்திரு’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை தன்ஷிகா பேசும் போது, தனது பெயரை குறிப்பிடவில்லை என்பதை குற்றமாக கருதிய டி.ராஜேந்தர், அந்த மேடையிலேயே தன்ஷிகாவை கடிந்துக்கொண்டதோடு, அவரை ஒரு பெண் என்றும் பாராமல், தனது அசிங்கமான அடுக்குமொழி வார்த்தைகளால் அவமரியாதை செய்துவிட்டார்.

 

டி.ராஜேந்திரன் இத்தகைய செயலுக்கு நேரடியாக பத்திரிகையாளர்கள் கண்டம் தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது ஆணவத்தை சுட்டிக்காட்டும் விதமாக செய்திகள் வெளியிட்டனர்.

 

இந்த நிலையில், தென்னிந்தி நடிகர்கள் சங்கம் சார்பில், செயலாளர் விஷால், தன்ஷிகாவை இப்படி பொது இடத்தில் அவமானப்படுத்திய டி.ராஜேந்தருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அந்த நிகழ்வில் டி.ஆர்-ன் பேச்சுக்கு கைதட்டி, சிரித்துக் கொண்டிருந்த நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் விதார்த்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர்  டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும், தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டி.ஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். 

 

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே... நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய் தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. 

 

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய் தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர்.  அவர் மன்னிப்பு கேட்டும் கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு... சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

விஷாலின் இத்தகைய கண்டனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை டி.ராஜேந்தர் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

 

அப்படியானால் தன்ஷிகாவால் பற்றிய தீயால் கோடம்பாக்கம் கொழுந்துவிட்டு எரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

எது எப்படியோ, டி.ராஜேந்தர் என்ற மூத்த கலைஞர், அந்த நிகழ்ச்சியில் பேசியதும், தன்ஷிகாவிடம் நடந்துக் கொண்ட விதமும் ரொம்ப கீழ்த்தரமானதே.