Oct 05, 2017 02:22 PM

சுந்தர்.சி-யால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஆபத்து - பிரபல நடிகர் புகார்!

சுந்தர்.சி-யால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஆபத்து - பிரபல நடிகர் புகார்!

பிரபல காமெடி நடிகரும் இயக்குநருமான வேல்முருகன், பிரபல இயக்குநர் சுந்தர்.சி-யால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஆபத்து, என்று கூறி போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அவர் கொடுத்த புகார் மனுவில், “நான் கடந்த 27 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். 4 படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளேன். 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

 

தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் இணை செயலாளராக பணிபுரிந்துள்ளேன். நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி எனக்கு நெருங்கிய நண்பர் ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும். தற்போது தொலைக்காட்சி ஒன்றில் நந்தினி என்ற தொடர் வெளியாகி வருகிறது. அந்த தொடரின் கதையை நான்தான் எழுதினேன்.

 

அந்த கதையை என்னிடம் பெற்றுக் கொண்ட நடிகர் சுந்தர்.சி அதற்காக ரூ.50 லட்சம் தருவதாக கூறினார். ஆனால் ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதி ரூ.46 லட்சம் பணத்தை தர மறுக்கிறார். அடியாட்களை அனுப்பி என்னை மிரட்டுகிறார்கள். பணத்தை தரமுடியாது, உன்னால் முடிந்ததை பார், என்று அடியாட்கள் சொல்கிறார்கள்.

 

இதுபோல், நடிகர் சுந்தர்.சி நிறைய பேரை ஏமாற்றி உள்ளார். அவர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சுந்தர்.சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த அண்ணா நகர் துணை கமிஷ்னருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.