Oct 05, 2017 03:25 PM

ஜெய்யை வைத்து படம் தயாரிக்கும் நடிகர் நிதின் சத்யா

ஜெய்யை வைத்து படம் தயாரிக்கும் நடிகர் நிதின் சத்யா

’சத்தம் போடாதே’, ‘சென்னை 600028’ உள்ளிட்ட பல படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நிதின் சத்யா, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தனது திரைப்பட நிறுவனத்திற்கு ‘SHVEDH' என்று பெயர் வைத்துள்ள அவர், ஜெய்யை ஹீரோவாக வைத்து தனது முதல் படத்தை தயாரித்து வருகிறார்.

 

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி, என்பவர் இயக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படம் குறித்து கூறியவர், “தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு பிரமாதமான கதையை சொன்னார். உடனே இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.  எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும். இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பர் என எங்களுக்கு தோன்றியது. அவரை அணுகி கதையை சொன்ன போது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அருமையாக உருவெடுத்து வருகிறது. ஜெய்யின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரும் பலமாகவுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின்  பெயர்கள்  மற்றும்  படத்தின் தலைப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும்''. என்றார்.

 

இப்படத்தை பத்ரி கஸ்தூரி என்ற நண்பருடன் இணைந்து நிதின் சத்யா தயாரித்து வருகிறார்.