Oct 13, 2017 07:40 PM

நண்பர் மனைவியின் அந்தரங்க வீடியோ - அதிர்ந்து போன இயக்குநரின் எச்சரிக்கை!

நண்பர் மனைவியின் அந்தரங்க வீடியோ - அதிர்ந்து போன இயக்குநரின் எச்சரிக்கை!

ஸ்மார்போன் ஒன்று இருந்தால் போது, எங்கிருந்து வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பார்க்கலாம், என்ற காலம் வந்துவிட்டது. அதிலும் சில இணைய சேவை நிறுவனங்களின் தாராள சலுகைகளால், தற்போது எந்நேரமும் இளசுகள் போனிலேயே மூழ்கியிருக்கிறார். அப்படி மூழ்கியிருப்பவர்கள், பார்க்ககூடியது பல அந்தரங்க வீடியோக்களும், ஆபாச வீடியோக்களும் அடக்கம்.

 

இதுபோன்ற அந்தரங்க வீடியோக்கள் பின்னணியில் பல கோடி ரூபாயும், மிகப்பெரிய மாபியா கும்பலும் இருப்பது தான் உண்மை. இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முதல் படமாக உருவாகியிருக்கிறது ‘எக்ஸ் வீடியோஸ்’ திரைப்படம்.

 

தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை, சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் சஜோசுந்தர் இயக்கியுள்ளார். கலர் ஷோடோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

கமர்ஷியல் படங்களை இயக்கி கல்லா கட்டுவதை விட்டுவிட்டு, இப்படிபட்ட சமூக விழிப்புணர்வு படம் எடுக்க காரணம் என்ன? என்று அவரிடம் கேட்டதற்கு, என் நண்பர் ஒருவர் எனக்கு பலவிதமான வீடியோக்களை பகிர்வார். அப்படி ஒரு முறை  அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ. அது என்னை அதிர வைத்தது மட்டுமல்ல, அது பற்றித் தீவிரமாகச்  சிந்திக்கவும் வைத்தது. அப்படிப்பட்டவை பற்றிய விவரம் சேகரிக்க இறங்கிய போது பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் தெரிய வந்தன. இப்படி சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிற வீடியோக்கள் உலகம் முழுக்க செல்கின்றன. அது தொடர்பாகப் பல கோடி வியாபாரம் நடக்கிறது. அதன் பின்னணியில் பெரிய மாபியா கும்பலே இயங்கி வருகிறது. 

 

இதுவரை வெளியே தெரியாத இந்த உண்மையை மக்களுக்கு சொல்வது மட்டும் இன்றி, இதுபோன்ற ஆபத்துக்களில் சிக்காமல் தங்களை எப்படி காத்துக்கொள்வது என்பதையும் சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் தான் இந்த படத்தை எடுத்தேன்.” என்றார்.

 

மேலும் கூறிய சஜோசுந்தர், இந்த படத்தின் கதையை கேட்டு பலரும் பயந்தார்கள். எல்லோரையும் சமாதனப்படுத்த வேண்டியிருந்தது. முதலில் என் மனைவியை சமாதானப்படுத்தி புரிய வைக்க படாதபாடுபட்டேன். இப்படியே நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் ஒருவழியாக சரிகட்டி இந்த படத்தை எடுத்துவிட்டேன். கதையை கேட்டு பயந்தவர்கள், இப்போது படத்தை பார்த்து பாராட்டுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, சென்சார் அதிகாரிகளும், ரொம்ப தைரியமான முயற்சி, என்று பாராட்டி தட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.

 

இது ஆபாசமான படமல்ல, ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாக சொல்லப்பட்ட படம். இன்று வரும் எத்தனையோ படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை. ஏதாவது கூச்சப்படுகிற மாதிரி சங்கோஜப் படுகிற மாதிரி காட்சிகள் இருக்கும். ஆனால், அத்தகைய எந்தவிதமான ஆபாச காட்சிகளும் இன்றி இப்படத்தை ரொம்ப நாகரீகமாக கையாண்டிருக்கிறேன்.” என்றவர், இப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும் பகுதியை அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட பயன்படுத்தப் போகிறாராம்.