Oct 20, 2018 05:37 PM

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுன்! - பிரபல நடிகையின் பேட்டியால் பரபரப்பு

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுன்! - பிரபல நடிகையின் பேட்டியால் பரபரப்பு

பாடகி சின்மயி ஆரம்பித்த பாலியல் புகார் தற்போது கோடம்பாக்கத்தில் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. சின்மயியை தொடர்ந்து பெண் இயக்குநர் லீனா மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளினி சிவரஞ்சனி என்று சினிமா பிரபலங்கள் மீது பலர் பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னட சினிமாவில் பிரபல ஹீரோயினாக இருக்கும் ஸ்ருதி ஹரிஹரன், தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். ‘நிபுணன்’ படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன், அப்படத்தில் அர்ஜுன், தன்னிடம்  தகாத முறையில் நடந்துக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ஸ்ருதி ஹரிஹரன், “எனக்கு பாலியல் தொல்லைகள் நடக்கும் போதெல்லாம் உடல் ரீதியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன், ஆனால் மனரீதியாக அது பயத்தை உண்டாக்கி என்னை பாதித்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து வெளிவர நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது இரு மொழிகளில் உருவாகி வந்த ஒரு படத்தில் நான் நடித்துவந்தேன். அதில் நடிகர் அர்ஜுன் சார் தான் நாயகன். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிப்பது குறித்து ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களுக்கு எனக்கு எதுவும் தோன்றவில்லை, அந்த படத்தில் நான் அவரது மனைவியாக நடித்தேன். 

 

ஒரு நாள் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதில் ஒரு நீளமான வசனத்திற்கு பிறகு நானும், அவரும் கட்டிப் பிடித்து நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை நாங்கள் ஒத்திகை பார்த்த போது, அர்ஜுன் திடீரென என்னை கட்டிப்பிடித்தார். என்னிடம் எதுவும் சொல்லாமல், என் அனுமதியை பெறாமல் என்னை கட்டி அணைத்து எனது பின் பகுதியில் மேலும், கீழும் அவர் கையை படறவிட்டார். என்னை மேலும் இறுக்கி அணைத்து, ”வேண்டுமென்றால் இந்த காட்சியை வைத்துக் கொள்ளலாமா” என்று இயக்குநரிடம் கேட்டார்.

 

சினிமாவில் காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொள்வது தவறு. அவர் சினிமாவுக்காக அப்படி நடந்து கொண்டிருந்தாலும் அது தவறு தான். அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை, என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே, தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி ஹரிஹரன், தமிழ் சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் அதிகமாக வராமல் இருக்க இது தான் காரணம், என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.