Dec 18, 2017 07:41 AM

இறந்த மீனவக் குடும்பங்களுக்கு 25 இலட்சம் நிதி - கருணாஸ் கோரிக்கை

இறந்த மீனவக் குடும்பங்களுக்கு 25 இலட்சம் நிதி - கருணாஸ் கோரிக்கை

ஒக்கிப் புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும், என்று நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

 

இந்த ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய ஒக்கிப் புயல், கன்னியகுமரி மாவட்டத்தை நடுநடுங்க வைத்துவிட்டது. இருண்ட மாவட்டமாக குமரி மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் பெண்களின் அழுகை ஓலங்கள், பசுமையாக காட்சி அளித்த குமரி  ஒக்கியால் உடைந்து கிடக்கிறது.

 

மத்திய அரசின் முறையான முன்னறிவிப்பு இல்லாததன் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இன்னமும் வீடுவந்து சேராத அவல நிலையில், நம் மீனவ மக்கள் வீதிக்கு வந்துநீதி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

 

அடுத்த நாட்டை மிரட்ட ராக்கெட் விட்டு அறிவியல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாகப் சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு, 36 மணிநேரத்திற்கு முன்பாகவே புயல் சீற்றங்களைக் கணிக்கும் தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் இந்திய அரசு, மிகப்பெரும் புயல் தமிழ்நாட்டைத்தாக்கப்போகிறது என குறைந்தபட்ச முன்னறிவிப்பை கூட செய்யாதது ஏன்?

 

சிங்களக் கடற்படையும், இந்தியக் கடற்படையும் நேரடியாகவே தமிழ் மீனவர்களைத் தாக்கி கொன்றொழிப்பதோடு மட்டுமின்றி அவர்களை கடலுக்குள் போக விடமால் கடல் மேலாண்மை போன்ற சட்டங்களை உருவாக்கி திணிப்பதும், இதுபோன்ற கடல் சீற்றப் புயல் வருவது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததின் நோக்கம் என்ன?

 

இந்தநாள் வரை நடுக்கடலில் மீனவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதப்பதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது, அவர்களின் உடலைக் கூட மீட்டுத் தராமல் இந்திய – தமிழ்நாடு அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர் அவ்வளவு அலட்சியமானதா?

 

தமிழக அரசு இறந்தவர் பட்டியலைக் கூட குறைத்து காட்ட முயல்வதில் உள் நோக்கம் என்ன?

 

புயலின் கோரத்தாண்டவத்தில் குமரி நிலைகுலைந்துள்ள நிலையில் தமிழக அரசு சற்றும் அசையாது கண் துடைப்பு செயலாக மட்டும் செயலாற்றாது. உரிய முறையில் செயலாற்ற வேண்டும்!

 

மத்திய அரசே! குமரியை தாக்கிய பேரிடர் போல வேறு எதுதான் உங்கள் பார்வையில் பேரிடர்? மாநில அரசே! உடனடியாக, ஒக்கிப் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் ! காணாமல் போனோரை உடனடியாக மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! இறந்த மீனவர்களின் கணக்கை முறையாக  பட்டியலிடவேண்டும் !

 

உடனடியாக, துயர் துடைப்புப்பணிகளைத் தீவிரப்படுத்துஉயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு25 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்கு!

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.