Oct 20, 2018 07:06 AM

சபரிமலை விவகாரம் - நடிகர் சிவகுமாரின் கருத்தால் பரபரப்பு

சபரிமலை விவகாரம் - நடிகர் சிவகுமாரின் கருத்தால் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, பெண்கள் சிலர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு செல்ல முயன்றதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் கோவிலுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதற்கிடையே, நேற்று இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தை நெருங்கிய போது, போராட்டம் கலவரமாக வெடித்ததை தொடர்ந்து, கேரள அரசு அந்த பெண்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் சிவகுமார் கூறிய கருத்து, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் சிவகுமார், “நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். 

 

பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ,ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.