பெண் மீது தாக்குதல் - கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மகன் கைது!
திருமணம் செய்ய மறுத்த பெண் மீது தாக்குதல் நடத்திய பிரபல கவர்ச்சி நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தவர் புவனேஸ்வரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன், பெண் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதாகும் மிது சீனிவாசன் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகிய இருவரும் பிறகு காதலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மிதுன் அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால், மிதுன் சீனிவாசன் குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை காரணம் காட்டி அப்பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.
இந்த நிலையில், அப்பெண்ணிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என்று கூறி மிதுன் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்பெண்ணும் வர, அவரிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய மிதுன், அவரை கடுமையாக தக்கியதோடு, அவரது செல்போனை பிடிங்கி உடைத்திருக்கிறார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மிதுன் சீனிவாசனை கைது செய்துள்ளனர்.