Sep 20, 2018 06:48 PM

தற்கொலை முயற்சி! - உயிருக்கு போராடும் நடிகை நிலானி

தற்கொலை முயற்சி! - உயிருக்கு போராடும் நடிகை நிலானி

சீரியல் நடிகை நிலானியின் காதலர் லலித்குமார் தற்கொலை விவகாரம் கடந்த சில தினங்களாக சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

நடிகை நிலானியும், உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், நடிகை நிலானி, லலித்குமார் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மனம் உடைந்த லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.

 

மேலும், லலித்குமாரும் நடிகை நிலானியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை நிலானி தலைமறைவாகிவிட்டதாகவும், அவர் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, லலித்குமார் தற்கொலைக்கு தான் காரணம் அல்ல, என்று கூறியதோடு, லலித்குமார் தன்னையும், தனது இரண்டு பிள்ளைகளையும் அடித்து உதைத்து டார்ச்சர் செய்ததாகவும், அவரை தான் பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் கூறினார்.

 

ஆனால், நிலானியின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் லலித்குமாரின் குடும்பத்தார், நிலானியும், லலித்குமாரும் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறியதோடு, நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

 

இந்நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.