Apr 16, 2018 08:25 AM

இயக்குநருக்காக நடிகை சதா எடுத்திருக்கும் புது அவதாரம்!

இயக்குநருக்காக நடிகை சதா எடுத்திருக்கும் புது அவதாரம்!

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சதா, சஜித், விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததோடு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். ஆனால், திடீரென்று போதிய வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிப் படங்களில் நடித்து வந்தவர், மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது ‘டார்ச் லைட்’ படத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக உருவாகியுள்ள ‘டார் லைட்’ படத்தை மஜீத் இயக்கியிருக்கிறார். விஜயை வைத்து ‘தமிழன்’ என்ற படத்தை இயக்கிய அதே மஜீத் தான் இவர்.

 

கான்பிடண்ட் பிலிம் கேஃப் நிறுவனம், ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றி பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்றுக்கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை தான் இந்த ‘டார்ச் லைட்’.

 

90 களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில், நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்க சம்மதித்துள்ளார்.

 

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படம் சதாவுக்கு திருப்புமுனையாக அமையும் வகையில் வந்திருக்கிறதாம். படத்தின் தரத்தையும், மேக்கிங்கையும் பார்த்து வியந்து போயிருக்கும் சதா, இயக்குநர் மஜீத் இயக்க இருக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்திருக்கிறாராம்.

 

ஆக, இயக்குநர் மஜீத்திற்காக நடிகை சதா தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் மஜீத் கூறுகையில், “நான் முதலில் இயக்கிய "தமிழன்" படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்ல பெரிய வெற்றியும் பெற்றது. அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் டார்ச் லைட் டுக்கான விஷயம் மனதில் பதிந்த போது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது  . நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்று தோன்றியது.

 

வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின்  வாழ்க்கையைப்  பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும்  என்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாகப்  உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருந்தேன்.

 

நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர். இப்படி 4O பேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். தான் நடிக்கச் சம்மதம் என்றார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும்.” என்றார்.