Nov 17, 2017 11:36 AM

பேட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் போபிசந்த் வாழ்க்கை படமாகிறது!

பேட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் போபிசந்த் வாழ்க்கை படமாகிறது!

நீரஜா, ஜாலி எல்எல்பி 1 &2, எம் எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி என பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படங்களாக தயாரித்து வெற்றி பெற்று வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், பேபி, ஏர்லிஃப்ட் போன்று வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிறந்த படங்களை கொடுத்த அபுண்டன்ஷியா எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான புல்லேலா கோபிசந்த் அவர்களை பற்றிய பயோபிக் படத்தை தயாரிக்கிறார்கள். 

 

கோபிசந்தின் விளையாட்டு மற்றும் குடும்ப வாழ்க்கையை மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையோடு தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் எடுக்கிறார்கள். திரைக்கதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

 

1973 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்த கோபிசந்த், வளரும் காலங்களில் கிரிக்கெட்டின் மீது தான் காதலாக இருந்தாராம். ஆனால் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீரராக மாறி, 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெருமைமிக்க ஒபன் பேட்மிண்டன் சாம்பியன் விருதை தட்டி வந்தார். இந்தியாவுக்கு பல பெருமைகளை தேடித்தந்த கோபிசந்த் 2003 ஆம் ஆண்டு பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்று, ஐதராபாத்தில் புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகடமியை துவங்கினார். 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால், 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து, சூப்பர் சீரீஸ் ரெக்கார்ட் செய்த ஸ்ரீகாந்த் கிடம்பி ஆகியோர் இந்த அகடமியில் கோபிசந்திடம் பயிற்சி பெற்றவர்கள் தான். 

 

பேட்மிண்டன் தற்போது இந்தியாவில் எல்லா மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பதும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் காட்டுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதன் மூலம் பல்வேறு கனவுகளில் இருக்கும் பலரை ஊக்கப்படுத்த முடியும் என்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நன்றாக நடந்து கொண்டு இருக்கின்றன, ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் விக்ரம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன் என்றார் புல்லேலா கோபிசந்த்.

 

சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல் ஒரு பயிற்சியாளராகவும் மாறி பல அடுத்த தலைமுறை உருவாக்கி, பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்த புல்லேலா கோபிசந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் பெருமை அடைகிறோம். நீரஜா, தோனி போன்ற உண்மைக் கதைகளை கொடுத்த சினிமாவாக கொடுத்த நாங்கள், கோபிசந்த் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஃபாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங்.

 

புதிய இந்தியாவின் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும் பேட்மிண்டன் கோபிசந்த் வரலாற்றை படமாக்குவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களிடம் கோபிசந்தின் கதையையும், அவரின் பார்க்காத சில பக்கங்களையும் கொண்டு சேர்க்கும் பெரும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதுவும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து இந்த பயணத்தை மேற்கொள்வதும், கோபிசந்தின்  அர்ப்பணிப்பு, உறுதி, தன்னம்பிக்கை ஆகியவற்றை திரையில் காட்டுவதும் பெருமையாக கருதுகிறோம். இந்த நேரத்தில்  கோபிசந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அபுண்டன்ஷியா எண்டர்டெயின்மெண்ட் சிஇஓ விக்ரம் மல்ஹோத்ரா.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, 2018 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது.