Apr 18, 2018 06:03 AM

முடிவுக்கு வந்த சினிமா வேலை நிறுத்தம்!

முடிவுக்கு வந்த சினிமா வேலை நிறுத்தம்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 45 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறவில்லை, புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் சினிமா ஊழியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும், தயாரிப்பாளர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்ததாலும், எதிர்காலத்தில் இந்த கோரிக்கைகளின் மூலம் சினிமாத் துறை வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதாலும், பெப்ஸி இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தது.

 

இந்த நிலையில், நேற்று தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. மதியம் 11.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சு வார்த்தை இரவு 8.30 மணி வரை நடந்தது.

 

பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், பிறகு முத்தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளையும், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணத்தை குறைப்பதற்கும் டிக்கெட் விற்பனையை கணினிமயம் ஆக்குவது, கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றார்.

 

மேலும் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்தார்.

 

இதனால், விரைவில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு படப்பிடிப்புகள், படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.