Feb 20, 2018 04:54 AM

தமிழகத்தில் கால் பதித்த கலர்ஸ் தொலைக்காட்சி!

தமிழகத்தில் கால் பதித்த கலர்ஸ் தொலைக்காட்சி!

இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமான வையாகாம் 18, இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. அதில் கலர்ஸ் தொலைக்காட்சி மிகவும் பிரபலமானது. இந்தி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, ஒரியா, வங்காள மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் சேனல், தற்போது தமிழிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பு சேவையை துவக்க இருக்கும் கலர்ஸ் சேனல் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

 

இன்னும் 24 மணிநேரத்தில், பிப்ரவரி 19 மாலை 7 மணிக்கு ஒளிபரப்பை துவக்குகிறது கலர்ஸ் தமிழ் சேனல். எற்கனவே கலர்ஸ் இந்தி, கன்னடத்தில் நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்தியாவில் கேபிள் விநியோகத்தில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட தமிழகத்திற்கு கொஞ்சம் லேட்டா வரோமே என்ற வருத்தம் இல்லை. எப்படி வருகிறோம், என்ன விஷயங்களை கொடுக்க போகிறோம் என்பது தான் முக்கியம். ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த பயணத்தை தொடங்கினோம். 18 மாவட்டங்களுக்கு சென்று என்ன தேவை என மக்களிடம் பேசினோம். 70 சேனல்கள் இருந்தாலும், அவற்றிலிருந்து  வித்தியாசப்படுத்தி நிகழ்ச்சிகளை கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம். சின்ன சின்ன விஷயங்களிலும் கூட கவனம் செலுத்தியிருக்கிறோம். வழக்கமான சீரியல்களில் இருந்து வேறுபட்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறோம். பிராந்திய மொழி சேனல்களில் இது ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். இந்தியாவின் சிறந்த சேனலாக கலர்ஸ் தமிழ் இருக்கும். தற்போது சேனலில் செய்திகள் இல்லை, திரைப்படங்களை 4 மாதங்கள் கழித்து வாங்குவோம். திரைத்துறையில் சின்ன படங்களுக்கு உதவுவது குறித்தும் முடிவுகள் எடுப்போம்.

 

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக மிகவும் தயக்கத்தோடு ஆர்யாவிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டேன். அவர் தயாராக இருக்கிறேன் என ஒரு அறிவிப்பு கொடுத்தவுடன் 70000 அழைப்புகள் வந்தன. 6000 பேர் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தார்கள். அதிலிருந்து ஒரு 18 பேரை தேர்வு செய்து நிகழ்ச்சியை உருவாக்கி வருகிறோம். இதை உண்மையான நிகழ்ச்சியாக உருவாக்கி, உணர்வுப் பூர்வமாகவே கையாண்டிருக்கிறோம். எப்ரல் இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார் ஆர்யா என்றார் கலர்ஸ் பிஸினஸ் ஹெட் அனூப் சந்திரசேகரன்.

 

கலர்ஸ் தமிழ் நிறைய நல்ல நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட, நம்ம ஊரில் கலருக்கு இருக்கும் முக்கியத்துவம் அதிகம். பேசும்போதும், வாழ்க்கையிலும் அதிகம் கலரை நாம் கொண்டாடுகிறோம். நம்ம ஊரு கலரு என்பதை கலர்ஸ் தமிழின் ஸ்லோகனாக தான் பார்க்கிறோம் என்றார் தீபன் ராமச்சந்திரன்.

 

குழந்தை பிறக்கும் போது அடையும் மகிழ்ச்சியை, கலர்ஸ் சேனல் துவங்கப்பட்ட போதும் உணர்கிறேன். சமீபத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் இந்தியாவின் மிகவும் தொன்மையான மொழி என்றார். அதோடு தமிழ் தான் மிகவும் இளமையான மொழியும் கூட. தமிழை கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கிறது. பாடல் எழுத நிறைய அழகான விஷயங்கள் நம் பாரம்பரியத்தில் இருந்தது. எழுதிய பாடல் வரிகளை உலகம் முழுக்க இருக்கும் 20 திறமையான இளம்  இசையமைப்பாளர்களிடம் கொடுத்து 20 பாடல்கள் வாங்கினோம். அதில் இருந்து மும்பையை சேர்ந்த சௌரவ் என்பவர் இசையமைத்த, பாடலை தேர்ந்தெடுத்தோம். மதுரை சின்னபொண்ணு, சத்யா, வேல்முருகன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அதோடு பாடலின் காணொளியில் நிறங்களையும், உணர்வையும் சிறப்பாக கொண்டு வந்திருந்தார் ஒளிப்பதிவாளர் திரு என்றார் மதன் கார்க்கி. 

 

நிறைய இளம் இசையமைப்பாளர்கள் திறமையை வெளிக்கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். ஒரு சேனல் துவங்கும் போது இந்த மாதிரி ஒரு பரிசோதனை முயற்சியை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அனூப் இதற்கு சம்மதித்ததோடு நிறைய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார் என்றார் டூபாடூ கௌதேயா. 

 

20 வருடங்களாக தொலைக்காட்சி சீரியல்களில் இருக்கிறேன். தொலைக்காட்சி தொடர்கள் பல பரிமாணங்களை கடந்து வந்திருக்கிறது. எல்லா விதமாகவும் தொடர்கள் வந்திருக்கின்றன. புதுசா என்ன சொல்றது, ரசிகர்களின் தேவை என்ன என்பது போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு கதைகளை தேர்வு செய்திருக்கிறோம். சமூக பொறுப்போடு எல்லாவற்றையும் அணுகியிருக்கிறோம். சமூக சீர்கேடுகளை அனுமதிக்க மாட்டோம். சினிமாவுக்கு அடுத்த நிலையில் தான் சீரியல் என்ற நிலை இருக்கிறது. அதை உடைக்க முயற்சி செய்கிறோம். இது வழக்கமான சீரியல் இல்லைனு உணர்வீர்கள் என்றார் தொலைக்காட்சி தொடர்கள் பிரிவு தலைவர் பாஸ்கர் சக்தி.

 

நான் இயக்குனராக இருந்தாலும் சீரியல் தயாரிப்பதை பற்றி ஒரு நாளும் யோசித்ததில்லை. நான் சீரியல் பார்த்ததுமில்லை. இந்த குழுவை சந்தித்த பிறகு என் கண்ணோட்டம் மாறியது. பாஸ்கர் சக்தியை இதற்கு தலைவராக நியமிச்சிருக்காங்க. சீரியலில் நல்ல எண்ணங்களோடு, நேர்மையாக உழைக்க சிறப்பான மனிதர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் அனூப். பிரபலங்களின் பின்னால் ஓடாமல் நல்ல புதுமுக கலைஞர்களை வைத்தே சீரியல் எடுக்க முயற்சி செய்திருக்கிறோம். இதையும் ஒரு சினிமாவாக தான் பார்க்கிறேன். டிஆர்பிக்காக எதையும் செய்யாமல் பொறுப்பான நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம் என்றார் சிவகாமி தொடரின் தயாரிப்பாளர் அஹமது.

 

நம் மக்கள் பொழுதுபோக்குக்கு நிறைய நேரம் செலவிடுகிறார்கள். பொறுப்புள்ள பொழுதுபோக்கு என்ற விஷயத்தை தான் கலர்ஸ் வலியுறுத்துகிறது. இதன் மூலம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புகிறேன் என்றார் சிவகாமி தொடரின் எழுத்தாளர் பாலா.

 

இது ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மற்ற குழந்தைகளும் இது உந்துசக்தியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இதை உருவாக்கியிருக்கிறோம் என்றார் கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சி . சுதாகர்.

 

நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கோம். இது ஒரு தொடக்கம் தான், இன்னும் நிறைய வர இருக்கிறது. தொலைக்காட்சி, ரேடியோ, ஹோர்டிங் என எல்லாவற்றிலும் விளம்பரங்கள் செய்து வருகிறோம். கலர்ஸ் தமிழ் தமிழ்நாட்டில் ஒரு முன்னுதாரணமான சேனலாக அமையும் என நம்புகிறேன் என்றார் மார்க்கெட்டிங் ஹெட் முத்து.

 

இந்த சந்திப்பில் பேரழகி தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் சரவணன், ஒளிப்பதிவாளர் வைத்தி, கதாசிரியர் பொன் இளங்கோ, வேலுநாச்சி தொடரின் எழுத்தாளர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.