Oct 17, 2018 03:21 PM

பள்ளி மாணவியான பழைய நடிகை! - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்

பள்ளி மாணவியான பழைய நடிகை! - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்

திரில்லர், திகில் என என்னதான் வித்தியாசமான ஜானரில் படங்கள் வந்தாலும், தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெரும் ஒரே ஜானர் கலர்புல்லான கமர்ஷியல் படங்கள் தான். அதிலும் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் கமர்ஷியல் படங்கள் என்றால், நூறு சதவீதம் வெற்றி தான். இதற்கு சான்றாக ‘கலகலப்பு’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று பல படங்களை சொல்லலாம்.

 

அந்த வரிசையிலான கலர்புல் காமெடிப் படமாக உருவாகியுள்ள படம் தான் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’.

 

எஸ்.எச்.மீடியா ட்ரீம் நிறுவனம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும் இப்படத்திற்கு நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்குகிறார். இவர் பல முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு கேமரா உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.

 

இதில் ஹீரோவாக விகாஷ் நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ராமர், ராகுல் தாத்தா, அம்பானி சங்கர், நாஞ்சில் விஜயன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்க, பிரபல நடிகை சித்ராவும், டெல்லி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

En Sangathu Aala Adichavan Evanda

 

22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க விரும்பிய நடிகை சித்ரா, பல்வேறு கதைகளை கேட்டு திருப்தியடையாதவர், இந்த கதையை கேட்டதும் ஓகே சொல்லியிருக்கிறார். டெல்லி கணேஷின் மனைவியாக நடித்திருக்கும் அவர் படத்தில் எந்த அளவுக்கு காமெடி இருக்கிறதோடு, அதே அளவுக்கு குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் இருந்ததால், உடனே சம்மதம் தெரிவித்தாராம். மேலும், பிளாஷ் பேக் காட்சி ஒன்றில் சித்ரா பள்ளி மாணவியாகவும், டெல்லி கணேஷ் மாணவராகவும் வருகிறார்களாம். இந்த காட்சிக்கு ஒட்டு மொத்த திரையரங்கமே வயிறு வலிக்க சிரிப்பது உறுதி என்று கூறும் இயக்குநர் நவீன் மணிகண்டன், “யாரையும் சாதாரணமாக நினைக்க கூடாது, யார் எப்போது எந்த நிலைக்கு வருவார்கள் என்றே தெரியாது” என்பதை கருவாக வைத்து, காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்தையும் சேர்த்து ஜாலியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறேன். குட்டி சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாக பொழுதை கழிக்கும் இளைஞர்களைப் பற்றிய கதை தான் இந்த படம். படத்தில் காமெடி ஹைலைட்டாக இருக்கும். ராகுல் தாத்தா, ராமர் ஆகியோரது காமெடி பெரிய அளவில் பேசப்படும்.

 

படம் முழுவதும் நாகர்கோவிலில் படமாக்கியிருக்கிறோம். பாடல்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் நாகர்கோவிலில் தான் நடத்தினோம். அதே சமயம், நாகர்கோவிலா இது! என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இதுவரை திரைப்படங்களில் காட்டாத லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறோம். படம் ரொம்பவே கலர்புல்லாக இருக்கும். எப்படிப்பட்ட மனநிலையோடு தியேட்டருக்குள் வந்தாலும், படம் முடிந்து வெளியே செல்லும் போது ரசிகர்கள் சந்தோஷமான மனநிலையோடு செல்வார்கள், அதை மனதில் வைத்து தான் இந்த படத்தின் திரைக்கதையும், காட்சிகளையும் நான் வடிவமைத்திருக்கிறேன்.” என்றார்.

 

லோகேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை கவி கார்கோ எழுதியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை ராக்கி ராஜேஷ் வடிவமைக்க, பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார். சாஜித் எடிட்டிங் செய்திருக்கிறார். மக்கள் தொடர்பு பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

 

தற்போது, முழு படப்பிடிப்பும் முடிந்து பின்னணி வேலையில் இருக்கும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் விஜய் டிவியின் கலகல்லப்போவது யாரு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. விரைவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருக்கும் படக்குழு அதை தொடர்ந்து படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.