Apr 18, 2018 08:45 AM

பிரபாஸுடன் இணையும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்!

பிரபாஸுடன் இணையும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்!

இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற ‘பாகுபலி’ படத்தினால், பிரபாஸின் அடுத்தப் படமான ‘சாஹோ’ விற்கு பாலிவுட்டிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘சாஹோ’ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் பூஷன் குமார் வெளியிடுவதற்காக யுவி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

 

இது தொடர்பாக பூஷன் குமாரின் டீ சீரிஸ் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. வட இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஒன்று, தென்னிந்திய நடிகரின் படத்திற்காக போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இந்திய திரையுலகில் மாபெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

 

மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் ‘சாஹோ’ படத்தின் மூலம் யுவி நிறுவனத்துடன் இணைந்திருக்கும் பூஷன் குமார் பேசுகையில், ”சாஹோவின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது. பிரபாஸ் ஒரு அகில இந்திய நட்சத்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும், உலக தரத்தினை மிஞ்சியதாக அமைந்துள்ளது.  இது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

 

நடிகர் பிரபாஸ் கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே சாஹோ ஒரு மாபெரும் காவிய சித்திரமாகவே உருப்பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஒரு திரைக்காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.” என்றார்.  

 

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இவர்களுடன் நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, முகேஷ் மஞ்சரேகர், சங்கி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

மதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, உலக புகழ் பெற்ற ஸ்டண்ட் இயக்குநர்கள் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

 

யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாஹோ’ அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.