Aug 21, 2018 05:37 PM

விஜய்க்காக எழுதிய கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்த சுசீந்திரன்!

விஜய்க்காக எழுதிய கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்த சுசீந்திரன்!

ஒரு குறிப்பிட்ட ஜானரில் மட்டுமே பயணிக்காமல் வெவ்வேறு கதைக்களத்தில் பயணித்து அதில் வெற்றியும் பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஜீனியஸ்’.

 

பெற்றோர்கள் தங்களது கனவை பிள்ளைகள் மீது திணிப்பதோடு, அவர்களது விருப்பத்தை அறியாமல் அவர்களை ஒரு எந்திரமாக மாற்றிவிடுவதைப் பற்றி பேசும் இப்படம் கருத்து சொல்லும் ஒரு பொழுது போக்கு படமாக உருவாகியுள்ளது.

 

இப்படத்தின் கதையை விஜய் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களிடம் சுசீந்திரன் சொல்லியிருக்கிறார். அவர்களும் கதையை கேட்டுவிட்டு, கதை பிடித்ததாக கூறினாலும், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதில் சற்று யோசித்திருக்கிறார்கள். அதாவது அமீர்கானின் ‘பி.கே’ படத்தைப் போன்ற ஒரு கதாபாத்திரம் என்று சொல்லலாம். இப்படி பெரிய ஹீரோக்கள் பிடித்து, அதே சமயம் கதாபாத்திரம் குறித்து யோசித்ததால், தற்போது இந்த படத்தை அறிமுக ஹீரோ ஒருவரை வைத்து சுசீந்திரன் இயக்கியிருக்கிறார்.

 

ரோஷன் என்ற அந்த அறிமுக ஹீரோ தான் இந்த ‘ஜீனியஸ்’ படத்தையும் தயாரிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தின் பஸ் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

Genius

 

நிகழ்ச்சியில் இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, “ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் என்டர்டேயினாராக இருக்கும்.” என்றார்.

 

ஹீரோ ரோஷன் பேசுகையில், “சில வருடங்களுக்கு முன்னால் நான் முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன். காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறிவந்தார்கள். அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல் தான் இருந்தேன். கல்யாணத்துக்கு பின்னர் என்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் “ நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள் ? “ என்று கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம் தான் இன்று சுசீந்தரன் சார் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது.  நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானதும் என்னுடைய நண்பன் என்னுடைய பிஸ்னஸ்சையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார். அவர் தான் எனக்கு மிகப்பெரிய பலம். அதன் பின்னர் எனக்காக சினிமாவை கற்றுக்கொண்ட என்னுடைய நண்பன் என்று நண்பர்கள் பலரின் உதவியால் தான் நான் இன்று இங்கு உள்ளேன். முதலில் ஒரு படத்தை தயாரித்தேன் ஆனால் அது இன்னும் வெளியாகவில்லை. அதற்கு சில காரங்கள் உள்ளது. ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும் , மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்த்ரனுக்கு நன்றி.” என்றார்.

 

இப்படத்தின் அனைத்து மொழி மக்களுக்கு பிடித்ததாக இருக்கும் என்பதால், இப்படத்தை தமிழ் மட்டும் இன்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.