Sep 24, 2017 02:31 PM

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ’பாரிஸ் பாரிஸ்’

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ’பாரிஸ் பாரிஸ்’

புகழ்பெற்ற இயக்குனர் தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான மனு குமாரன், ’லைகர்’ மனோஜ் கேசவனோடு இணைந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.  இத்திரைப்படம், ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்து ‘குயின்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் உருவாகும் இத்திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, நாயகனாக சஷி வருண் நடிக்கிறார்.

 

சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுயஅடையாளத்தைக்   கண்டுகொள்கிறாள். 

 

இத்திரைப்படத்திற்கு இசை அமித் திரிவேதியிடமும், ஒளிப்பதிவு சத்யா ஹெக்டேயிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கலைக்கு குணா கென்னெடியும், வசனங்கள் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதுகிறார்.  பங்கஜ் கபூருடன் இணைந்து கதை, திரைக்கதையை கவனித்து கொள்ளும் ரமேஷ் அரவிந்த், இத்திரைப்படத்தை அவர் தனித்து  இயக்குகிறார்.

 

முதல் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என நான்கு தென்னக மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிற இத்திரைப்படம், ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.    

 

12.5 கோடி பட்ஜெட்டில் தயாரான ’குயின்’ வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.  

 

 

தயாரிப்பாளர் - மனு குமாரன் 

 

புகழ்பெற்ற இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான மனு குமாரன், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தமிழ், துருக்கி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இதுவரை சுமார் 19 திரைப்படங்களைத் தயாரித்த அனுபவமிக்கவர்.

 

மாறுபட்ட திரைப்படங்களுக்கான ஒரு புதிய சந்தையையே உருவாக்கிய பெருமை 1998 ஆம் ஆண்டு அவர் தயாரித்த “பாம்பே பாய்ஸ்” திரைப்படத்தையேச் சாரும். 

மனு குமாரன் கடந்த 2002 ஆம் ஆண்டில் மீடியன்ட் எனும் ஊடக தயாரிப்பு நிறுவனத்தையும், ABOB – BOYS BAND என்ற இந்தியாவின் முதல் சிறுவர்கள் இசைக்குழுவையும் நிறுவினார்.  இசைக்குழுவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இக்குழுவின் இசை-வாழ்க்கை பயணத்தையே முதல் அடித்தளமாகக் கொண்டு, முதல் திரைப்படமாக கிஸ் கிஸ் கோ (Kiss Kis Ko)  என்ற பெயரில் தயாரித்தார். அடுத்ததாக, ஹென்ட்ரிக் இப்செனின் நாடகமான தி மாஸ்டர் பில்டரை தழுவி, அவர் தயாரித்த மலையாள திரைப்படம் ஆகாசகோபுரம் பல விருதுகளை வென்றது.

 

மேலும் மனு குமாரன்,  மேற்கத்திய ரசிகர்களுக்காக ஹாலிவுட்டில் வெற்றித்  திரைபடங்கள் தயாரித்த முதல் இந்திய தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர். நிக் கசவேட்ஸ் இயக்கத்தில் அவர் தயாரித்த எல்லோ(Yellow) திரைப்படமும், பாஃப்தா விருது வென்ற நோயல் கிளார்க் நடித்த ஸ்டோரேஜ் 24 (Storage 24) திரைப்படத்தையும் தயாரித்தவர். குறைந்த பொருட்செலவில் தரமான வெற்றித் திரைப்படங்கள் உருவாக்குவதில் வல்லவர். 

 

மீடியன்ட்:

 

இந்நிறுவனம் சர்வதேச அளவில் பொழுது போக்கு அம்சங்களும், சமூக அக்கரையும் நிறைந்த பன்மொழி திரைப்படங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது.  இதன் கிளைகள் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம்(UK), மால்டா, மற்றும் ஐக்கிய  அரபு நாடுகளிலும் அமைய பெற்று, இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் தனித்துவம் புதிய திறமைகளை அடையாளம் கண்டுக்கொள்வதும், ஊக்குவிப்பதும், உயர்ந்த கருத்துகளைக் கொண்ட திரைக்கதைகளையே தயாரிப்பதும் ஆகும். இதற்கு சான்றாக அவர்களது தயாரிப்புகளான எல்லோ, ஆகாசகோபுரம், பாம்பே பாய்ஸ், ஸ்டோரேஜ் 24 ஆகிய படைப்புகள் அமைந்துள்ளது. 2014 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணத்தை அடித்தளமாகக் கொண்டு மீடியன்ட் தயாரித்த “பேட்டில் ஃபார் பனாராஸ்” ஆவணப்படம் மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றுப் பாராட்டுகளைக் குவித்தது. 

 

தற்போது ஹெல்ப்ரூக் மேனர் மற்றும் அணிமித்ஸ் ஆகிய இரண்டு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

 

ஹெல்ப்ரூக் மேனர் உலகத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளையும் இயக்குனர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிலி, பல்கேரியா, அமெரிக்கா, மற்றும் ஐக்கிய ராஜ்யம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விருது பெற்ற இயக்குனர்களை ஒன்றாக இணைத்து, ஆறு திகில் படங்களை உருவாக்குவதில் தற்போது ஈடுபட்டுள்ளது.

அணிமித்ஸ் மூலம் அனிமேஷன் துறையிலும் தடம் பதிக்கவுள்ளது.

 

ரமேஷ் அரவிந்த்:

 

நடிகர், இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், எழுத்தாளர்

 

கடந்த இருபது வருடங்களாக அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பணியாற்றி வருகிற ஒரு சிறந்த கன்னடத்து திரை நட்சத்திரம். நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தும், ஏழு படங்களை இயக்கியும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பிரபலமாகவும், இரண்டு புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும் இருக்கிறார். பிரபல வானொலி தொகுப்பாளரான ரமேஷ் தனது மனைவி அர்ச்சனா, குழந்தைகள் நிஹாரிகா, மற்றும் அர்ஜுனுடன் பெங்களூரூவில் வசித்து வருகிறார்.

 

1964ம் பெங்களூரூவிலேயே பிறந்து, வளர்ந்த ரமேஷ் தன்னுடைய பள்ளி கல்லூரி நாட்களிலேயே கலையின் மேல் தீராத அதிதீவிர பற்று கொண்டு, கலை-நாடகத் துறைகளில் கவனம் செலுத்தினார். “பரிச்சயா” என்ற தொலைக்காட்சி தொடர் அவரை கலை உலகிற்கு அடையாளம் காட்டியது. அவரது சுறுசுறுப்பான திரை ஆளுமையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் K.பாலச்சந்தர், “சுந்தர ஸ்வப்னகலு” என்ற மும்மொழி திரைப்படத்தின் மூலம் (கன்னடம், தெலுங்கு, தமிழ்) அவரை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார்.

 

புத்துணர்ச்சி மிக்க நடிப்பால் ரசிகர்கள் இதயத்தைக் கவர்ந்த ரமேஷ், வெகு எளிதில் கன்னடத் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக முன்னேறினார். தொடர்ச்சியாக ஒன்பது வெற்றிப்படங்களை வழங்கி, 1997 ம் ஆண்டின்  கன்னட திரையுலகின் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்தவர். 

 

அவரது எழுத்து திறமைக்கு ஹூமலே, அம்ருததாரே, ஆக்சிடென்ட் ஆகியன மேலான ஆவணங்கள். 

 

2005ம் ஆண்டு இயக்குனராக களமிறங்கி, கமல்ஹாசனுடன் சேர்ந்து “ராமா ஷாமா பாமா” என்ற தரமான முழுநீள நகைச்சுவை படத்தை இயக்கி நடித்ததோடு, தொடர்ந்து ஆறு கன்னட படங்களையும் இயக்கி இருக்கிறார்.   

 

கமல்ஹாசன், K பாலச்சந்தர், K விஸ்வநாத் ஆகியோர் நடித்த “உத்தம வில்லன்” என்ற படத்தை இயக்கியதன் மூலம் 2015ம் ஆண்டு, தமிழில் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார்.

 

மூன்றாவது சீசனாக நடைபெறும், வீக் எண்ட் வித் ரமேஷ் என்ற அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் பிரசித்தம்.

 

பல்வேறு விருதுகளைப் பெற்ற ரமேஷுக்கு, இரண்டு முறை சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதும், இரு முறை கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருதும், ஸ்க்ரீன் பத்திரிக்கையின் சிறந்த நடிகர் விருதும் கிடைத்துள்ளது.  உதயா தொலைகாட்சி சிறந்த அறிமுக இயக்குனர் விருதை வழங்கி கௌரவித்தது. சிறந்த கதைக்காக ராகவேந்திரா சினி விருதும், அகில இந்திய அறிவுசார் சங்கம் கிரேட் சன் ஆஃப் கர்நாடகா விருது வழங்கி கௌரவித்து மகிழ்ந்தது.

 

“இட்ஸ் நோ பஃன் வித்தௌட் யூ” என்று ஆங்கிலத்திலும், “குஷியிண்ட ரமேஷ்” என்று கன்னடத்திலுமாக, இரு புத்தகங்கள் எழுதி இருக்கிறார். 

 

மேலும் அவர் பெங்களுரு, மைசூரு நகரங்களின் குழந்தைகளின் குடிமை விழிப்புணர்வு இயக்கத்தின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். இவ்வியக்கம் நகரங்களை தூய்மையாக வைப்பதற்கும், மக்களிடையே அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செயல்படுகிறது. அவர் 2013ம் ஆண்டிற்கான தேர்தல் கமிஷனின் விளம்பர தூதுவராகவும் இருந்து, ஓட்டுகளின் முக்கியத்துவத்தையும், ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தையும் மக்களிடையே கொண்டு சேர்த்தார். முதியோருக்கான டிக்னிட்டி ஃபவுண்டேஷன் உட்பட பல்வேறு தரப்பட்ட இயக்கங்களுக்கும் விளம்பர தூதுவராகப் பணியாற்றியதோடு கர்நாடகாவில் எய்ட்ஸ், ஹெச்ஐவீ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் அவருக்கு “7 நயமான மனிதர்களில் ஒருவர் விருது வழங்கி கௌரவித்து உள்ளது.