Jan 19, 2018 11:49 AM

தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச வரும் ‘கேணி’!

தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச வரும் ‘கேணி’!

ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு 7 க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். 

 

 

முழுக்க முழௌக்க கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு உருவாகும் இப்படம் தேசத்திற்கான முக்கிய பிரச்சினையாக இருக்க கூடிய தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பேசுகிறது. 

 

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பார்த்திபன், நாசர், ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். ’விக்ரம் வேதா’ படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார்.  ‘தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.  ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பழனிபாரதி பாடல்கள் எழுத, தாஸ் ராம்பாலா வசனம் எழுதியுள்ளார்.

 

படம் குறித்து இயக்குநர் எம்.ஏ.நிஷாத் பேசுகையில், “’கேணி’ எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக ‘கேணி’ ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்” என்றார்.