Oct 09, 2018 06:07 PM

நயந்தாராவின் ‘ஐரா’-வுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

நயந்தாராவின் ‘ஐரா’-வுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

’அறம்’ படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கிய நயந்தாரா, ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு நிகரான ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இதன் மூலம் நயந்தாரா நடிக்கும் ஹீரோயின் சப்ஜக்ட் படங்களுக்கு கோலிவுட்டில் வியாபார ரீதியாகவும் பெரும் வரவேற்பு இருப்பதனால், அவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வரிசையில் நிற்கிறார்கள்.

 

இதற்கிடையே, நயந்தாராவின் அடுத்தப் படத்திற்கு ‘ஐரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ’அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தில் நயந்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

 

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கியவரும், சமீபத்தில் வெளியான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கியவருமான சர்ஜூன், இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பிரியங்கா ரவீந்திரன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பு செய்ய, ‘அவள்’ பட புகழ் சிவசங்கர் இப்படத்தின் கலையை நிர்மாணிக்கிறார். ஏழுமலை நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்.

 

இப்படத்தில் நயந்தாராவுடன் கலையரசன், யோகி பாபு, ஜே.பி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

‘ஐரா’ என்ற வார்த்தை யானையை குறிக்கும். யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்ட, ஒரு திகில் படமாக இப்படம் உருவாகிறது.

 

Nayanthara in Ira

 

இப்படம் குறித்து கூறிய தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே.ராஜேஷ், “நயந்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரையுலக அந்தஸ்து ‘ஐரா’ படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயந்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் மிகவும் கவரும் கதை என புரிந்தது.” என்றார்.