’ஓடு ராஜா ஓடு’ படத்திற்காக தெரு தெருவாக ஓடிய நாசர்!
விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘ஓடு ராஜா ஓடு’. இதில் ‘ஜோக்கர்’ பட புகழ் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடிக்க, நாசர், ’லென்ஸ்’ பட புகழ் ஆனந்த்சாமி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கணவன் - மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில், ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களது வாழ்க்கை எப்படி மாறுகிறது, என்பது தான் இப்படத்தின் கதை.
24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இப்படத்தில் நான்கு முக்கிய கதாபாத்திரங்களும், அவர்களுக்கான நான்கு வெவ்வேறு கதைகளையும் ஒரே நேர்கோட்டில் இணைப்பது போன்ற திரைக்கதை அமைப்போடு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நாசர், குரு சோமசுந்தரம், ஆனந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், “இப்போது சினிமாவுக்கு வருபவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பதால், வித்தியாசமான படங்கள் நிறைய வருகின்றன. இந்தப் படத்தில் கூட கதை சொல்லும் போதே மனதிற்குள் ஊடுருவியது. எல்லாப் படத்திற்கும் நான் முழு உழைப்பையும் தந்துவிட மாட்டோம். ஒரு சில படங்கள் மட்டுமே நாம் அதீத ஈடுபாட்டுடன் நடிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், இந்த படத்தில் நான் அதிக ஈடுபட்டுடன் நடித்தேன்.
படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவாக ஓடினேன். இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்.” என்று தெரிவித்தார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.