Mar 23, 2018 04:45 AM

அட்லீயை ஓரம் கட்ட நினைக்கும் தயாரிப்பாளர் - கைகொடுப்பாரா விஜய்!

அட்லீயை ஓரம் கட்ட நினைக்கும் தயாரிப்பாளர் - கைகொடுப்பாரா விஜய்!

‘ராஜா ராணி’ என்ற தனது முதல் படத்தின் மூலமாகவே மிகப்பெரிய வெற்றிக் கொடுத்த இயக்குநர் அட்லீ, ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றி சினிமா பாடம் கற்றுக்கொண்டவர். இரண்டாவது படத்திலேயே விஜய் போன்ற மாஸ் ஹீரோவை இயக்கி ’தெறி’ என்ற மாபெரும் வெற்றியைக் கொடுத்தவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவையே மிரட்டினார்.

 

இப்படி தான் இயக்கிய மூன்று படங்களையும் ஹிட் படங்களாக கொடுத்தாலும், இயக்குநர் அட்லீ மீது பலர் சில குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதோடு, அவரை ஓரம் கட்டவும் பார்க்கிறார்கள். ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு மீண்டும் விஜயுடன் அட்லீ இணையப் போவதாக தகவல் வந்த நிலையில், தற்போது அது இல்லை என்று முடிவாகிவிட்டது. மேலும், அதே படத்தில் அட்லீக்கு தயாரிப்பு தரப்பு சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, அட்லீக்கு தயாரிப்பாளர்கள் யாரும் படம் தரக்கூடாது, ஹீரோக்கள் தேதி தரக்கூடாது, என்று வெளிப்படையாக பேசியதோடு, அவர் மீது அனல் கக்கும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஹீரோக்களுக்காகவும், அவர்களது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் படம் இயக்குவது என்பது சவலான விஷயம் என்ற போதிலும், அதை ரொம்ப எளிதாக கையாண்டு விஜயையும், அவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கும் இயக்குநர் அட்லீக்கு தயாரிப்பாளர் ஒருவர் இப்படி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருப்பது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அட்லீக்கு விஜய் கைகொடுக்க வேண்டும் என்று அட்லீ தரப்பு கூறினாலும், இதுவரை விஜய் தரப்பில் இருந்து அட்லீக்கு ஆதரவாக எந்த குரலும் ஒலிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.