சத்யம் சினிமாஸை வாங்கிய பி.வி.ஆர்!
சென்னை உள்ளிட்ட தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் பிரபலமான திரையரங்காக விளங்கும் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் பங்குகளை பி.வி.ஆர் நிறுவனம் வாங்கியுள்ளது.
கடந்த 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சத்யம் திரையரங்குகளின் உரிமையாளரான எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம், சென்னை மட்டும் இன்றி பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பல்வேறு பெயர்களில் திரையரங்குகளை நடத்தி வருகிறது.
சென்னையில், சத்யம் சினிமாஸ், எஸ் 2, எஸ்கேப், பலாசு, தி சினிமா என்ற பெயர்களில் சத்யம் திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சத்யம் சினிமாஸின் பங்குகளில் 71.7 சதவீதத்தை ரூ.85 கோடிக்கு பி.வி.ஆர் நிறுவனம் வாங்கியுள்ளது.
சத்யம் சினிமாஸின் பங்குகளை வாங்கியதன் மூலம் பி.வி.ஆருக்கு தற்போது 60 நகரங்களில் 152 இடங்களில் 706 திரையரங்க ஸ்கீரின்கள் உள்ளது. இதன் மூலம் உலகின் 7வது மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமையை பி.வி.ஆர் பெற்றுள்ளது.
அதே சமயம், 10 நகரங்களில் 78 தியேட்டர்களை கொண்டுள்ள சத்யம் சினிமாஸ் அடுத்த 5 ஆண்டுகளில் 100 தியேட்டர்களாக விரிவுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.