Feb 03, 2018 07:13 AM

முடியும் பதவி காலம் - விஷாலுடன் போட்டி போட தயாராகும் ராதாரவி!

முடியும் பதவி காலம் - விஷாலுடன் போட்டி போட தயாராகும் ராதாரவி!

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாசர் தலைவராகவும், விஷால் செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுடன் 25 செயற்குழு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.

 

இந்த புதிய நிர்வாகிகள் குழு, சென்னையில் உள்ள நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல வகையில் நிதி திரட்டி வரும் இவர்கள் கட்டுமான பணியை தொடங்கியுள்ளனர். இந்த பணி இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், புதிய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் மே மாதத்தோடு முடிவடைவதால், மே மாதம் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வர உள்ளது. இதற்காக அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

நடிகர் சங்கத்தின் கட்டிட பணி முடியாத காரணத்தால், இந்த தேர்தலிலும் விஷால் தலைமையிலான அணியினர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அதே சமயம், ராதாரவி தலைமையிலான அணியினர் மீண்டும் விஷாலை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். சரத்குமார், வாகை சந்திரசேகர் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்.

 

ஆனால், சரத்குமார், ராதாராவி ஆகியோரை சங்கத்தில் இருந்து நிக்கிவிட்டதால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விஷால் தரப்பு கூறி வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் தேர்தலில் போட்டியிட ராதாரவி தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். தற்போது வழக்கு தொடர்வதற்கான பணியில் ராதாரவி ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.