Feb 04, 2018 05:04 PM

ரஜினியை ஓவர்டேக் செய்யும் லாரன்ஸ்!

ரஜினியை ஓவர்டேக் செய்யும் லாரன்ஸ்!

அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள ரஜினிகாந்த், அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சென்னைக்கு வர வைத்து சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தனது மக்கள் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளவர், மாவட்டம் வாரியாக புதிய நிர்வாகிகளையும் நிர்வகித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநரும் நடிகருமான லாரன்ஸும், மாவட்டம் வாரியாக தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.

 

இதற்கு காரணம், அவரது ரசிகரின் மரணம் தான். ஆம், கடலூரை சேர்ந்த ஆர்.சேகர் என்ற ரசிகர் லாரன்ஸை நேரில் சந்தித்து புகைப்படம் எடுப்பதற்காக சென்னை வரும் போது எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டு இறந்து போனார். இதனால் வருத்தமடைந்த லாரன்ஸ், இனி தன்னை சந்திக்க எந்த ரசிகரும் சென்னை வர வேண்டாம், என்று அறிவித்துள்ளதோடு, அதிரடியான முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார்.

 

அதாவது, தன்னை நேரில் சந்திக்க பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரசிகர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக, ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை சந்திக்க லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.

 

இதற்காக, அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அங்கிருக்கும் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம். எப்போது, எந்த மாவட்டத்திற்கு அவர் வருகிறார், என்பதை தனது ரசிகர் மன்றம் மூலம் முன்னதாக அறிவித்துவிட்டு செல்வாராம்.

 

குருவையே மிஞ்சிட்டாரே...