Oct 13, 2018 07:05 AM

விஜயின் அரசியல் பிரவேசத்திற்காக ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் எஸ்.ஏ.சி!

விஜயின் அரசியல் பிரவேசத்திற்காக ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் எஸ்.ஏ.சி!

நடிகர் விஜயின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜயை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். விஜய் ரசிகர் மன்றங்களை தனது கட்டுப்பாட்டி வைத்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, அதனால் பல பிரச்சினைகளுக்கும் உள்ளானார். இதன் காரணமாக, விஜய் படங்கள் ரிலீஸின் போது பல பிரச்சினைகளை எதிர்கொண்டது.

 

இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து விஜய் ரசிகர் மன்ற பொறுப்புகள் பறிக்கப்பட்டது. இதனால், விஜய் ரசிகர் மன்ற பணிகளிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலையிடுவதில்லை.

 

இந்த நிலையில், ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், பாபநாசத்தில், தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், “நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும். இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன்.” என்றார்.

 

மேலும், நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். தற்போது ஆன்மீக பயணமாக நான் வந்துள்ளேன், என்றும் அவர் கூறினார்.

 

எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த ஆன்மீக பயணம் விஜயின் அரசியல் பிரவேசத்திற்காக தான் என்றும் கூறப்படுகிறது. மெர்சல் பட சர்ச்சையின் போது இந்துக்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட எஸ்.ஏ.சி, தன் மீதான அவப்பெயரை போக்குவதற்காகவே, தாமிரபரணி புஷ்கர் விழாவில் கலந்துகொண்டதோடு, இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் தான், என்றும் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.