Feb 24, 2018 01:11 PM

‘கரு’ வின் பலமே சாய் பல்லவி தான் - இயக்குநர் விஜய்

‘கரு’ வின் பலமே சாய் பல்லவி தான் - இயக்குநர் விஜய்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கரு’. ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் நாக செளர்யா ஹீரோவாக நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் கரு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஜய், “கரு என் கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கிறேன். இந்த கதையை 2014 ஆம் ஆண்டு லைகா நிறுவனத்தில் நான் சொன்னேன், அப்போது அவர்கள் இந்த படத்தை நீங்கள் எப்போது எடுத்தாலும், நாங்கள் தான் தயாரிப்போம் என்று கூறினார்கள், அதன்படி இன்று அவர்கள் இந்த படத்தை ரொம்ப சிறப்பாக தயாரித்திருக்கிறார்கள். இது சாதாரண பட்ஜெட் படம் அல்ல, மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். காரணம், படத்தில் நிறைய விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் இருக்கின்றன. அதற்காக லைகா நிறுவனம் பல கோடிகளை செலவு செய்திருக்கிறது. கார் ஒன்றை வைத்து எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிக்கு மட்டுமே மிகப்பெரிய தொகையை லைகா நிறுவனம் செலவு செய்திருக்கிறது, காரணம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக தான். அவர்கள் நினைத்தது போல படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

 

மலையாளம், தெலுங்கு என்று இரு மொழிகளில் வெற்றி படங்களோடு அறிமுகமான சாய் பல்லவியை தமிழில் அறிமுகப்படுத்த பல முயற்சித்து வந்தாலும், அவர் தமிழ்ப் படங்களை நிராகரித்து வந்தார். அந்த நேரத்தில் தான் நான் அவரை அணுகினேன். அவர் முதலில் நடிக்க மறுத்துவிட்டார். பிறகு கதையை கேளுங்க, பிறகு சொல்லுங்க, என்று கூறி நான் கதையை அவரிடம் கூறினேன், கதையை கேட்டதும் அவர் நடிக்க சம்மதித்துவிட்டார். சாய் பல்லவி இந்த படத்திற்குள் வந்ததும், அது வேற லெவலுக்கு சென்றுவிட்டது. இந்த படத்தின் மிகப்பெரிய பலமே சாய் பல்லவி தான். அவர் சிறப்பான நடிகை. சாதாரண காட்சிகளை கூட தனது நடிப்பால் சிறப்பாகிவிடுகிறார். அவரை மையமாக வைத்து கதை எழுதும் ஒரு நடிகையாக அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை தொடுவார்.” என்றார்.

 

சாய் பல்லவி பேசுகையில், “நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான். தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் நிறைய பொறுப்புகள் இருந்தது. முதல் படத்தை நல்ல படமாக பண்ணனும்னு நினைச்சேன். அதனால் தான் இவ்வளவு தாமதம். படத்தில் நடிக்கும் போது உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றி விட்டோம். பேபி வெரோனிகாவோடு நடிக்கும் போது எனக்கு தான் பிரஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தவர் இயக்குனர் விஜய்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசுகையில், “இது ஒரு உணர்வுப்பூர்வமான படம். விக்ரம் வேதா ரிலீஸ் ஆன நேரத்தில் கரு படம் முக்கால்வாசி முடித்திருந்த விஜய் சார், என்னை அழைத்து உணர்வுப்பூர்வமான ஒரு படம், இசையமைக்கிறீங்களானு கேட்டார். நான் எமோஷனலான படத்தில் வேலை செய்வதை பெருமையாக நினைக்கிறேன். சொல்ல வந்ததை நேர்மையாக சொல்லும் ஒரு சில இயக்குனர்களில் விஜயும் ஒருவர். அவரோடு தொடர்ந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன். ஹிட் ஆக்கணும்னு எந்த பாடலும் போடவில்லை. கதைக்கு நேர்மையான இசையை கொடுத்திருக்கிறோம். சித்ரா அம்மாவோடு ஒரு புகைப்படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டிருந்தேன், ஆனால் இந்தஅவர்களோடு ஒரு பாடலில் இணையும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்.” என்றார்.