Jun 21, 2018 10:23 AM

‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்!

‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், திடீரென்று நடிப்பதை குறைத்துக் கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கில் எந்த படமும் கைவசம் இல்லாத அவர் தற்போது இந்தி படம் ஒன்றில் மட்டும் நடித்து வருகிறார்.

 

காதல், திருமணம் என்று ஸ்ருதி குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இஸிட்ரோ மீடியா என்ற அவரது சொந்த நிறுவனம் சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தை ‘லென்ஸ்’ படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

 

‘லென்ஸ்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அத்துடன் இவரது படத்தைப் பார்த்த அனைவரும் இவரின் கதை சொல்லும் பாணியை வெகுவாக ரசித்து பாராட்டினர். அதிலும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, எளிமையான பாணியில் கதையை சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருந்தது. இந்த படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.

 

இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே இது படமாக்கப்படவிருக்கிறது. 

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், “உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தாங்கள் உருவாக்கும் கலை படைப்பை முடிந்தவரை பார்வையாளர்களுக்கு உண்மைக்கு அணுக்கமாக இருக்கும் வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’, உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது. இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம்  இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது. அதாவது திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பின் போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள் கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது.’ என்றார்.

 

நடிகை ஸ்ருதிஹாசன் தனது முதல் தயாரிப்பு மற்றும் நிறுவனம் பற்றி கூறுகையில், “எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவராசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது. இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத்தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது. நாங்கள் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இயக்குநரை பாராட்டினோம். அத்துடன் அவரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும் போது சவாலை கொடுக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம். இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம்.” என்றார்.