Apr 21, 2018 08:19 AM

மன்சூரலிகானுக்காக களத்தில் இறங்கிய சிம்பு!

மன்சூரலிகானுக்காக களத்தில் இறங்கிய சிம்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி திரைப்பட கலைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் சீறுடையில் இருந்த போலீசார் தாக்கப்பட்டனர்.

 

இதையடுத்து, போலீசாரை தாக்கியவர்களை கைது செய்த போலீசார், அந்த சமயமத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூரலிகானையும் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், நடிகர் மன்சூரலிகானை மட்டும் விடுவிக்கவில்லை. அவர் கடந்த ஒரு வாரமாக சிறையில் இருக்கிறார்.

 

இந்த நிலையில், இன்று காலை சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் வந்த நடிகர் சிம்பு, மன்சூரலிகானை விடுவிக்க கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.

 

இது குறித்து நிருபர்களிடம் பேசிய சிம்பு, “காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். போலீசாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தின்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். அதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது முறையல்ல.

 

அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்பட்டு தினமும் மருந்து உட்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். போலீசாரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

 

அவரது குடும்பத்தினர் என்னை சந்தித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் கமி‌ஷனரை சந்தித்து முறையிட்டேன்.” என்று தெரிவித்தார்.

 

காவிரி மேலாண்மை வாரியத்திற்கான சென்னையில் நடிகர் நடிகைகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காத சிம்பு, காவிரி விவகாரம் குறித்து தெரிவித்த கருத்தை கர்நாடக கட்சிகளும் மக்களும் ஏற்றுக்கொண்டு வரவேற்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.