Nov 22, 2018 06:24 AM

நடிகர் ராதாரவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயி!

நடிகர் ராதாரவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயி!

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பிரபல பின்னணி பாடகி சின்மயி, அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்ததோடு, தொடர்ந்து பல மீது பாலியல் புகார் கூறி வந்தார். சின்மயியை தொடர்ந்து மேலும் சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வந்ததால், தமிழ் திரையுலகில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

 

இதையடுத்து, சிலர் மீ டூ புகார் கூறும் நடிகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த நிலை நீடித்தால், நாடகங்களில் ஆண்கள் பெண்கள் வேடம் போடுவது போல, சினிமாவிலும் வரும் என்று கூறி, எச்சரிக்கையும் விடுத்தனர்.

 

இதற்கிடையே, பாடகியாக மட்டும் இன்றி பிரபல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த சின்மயி, டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருந்தார். ஆனால், அவர் கடந்த இரண்டு வருடங்கள் சந்தா கட்டாததால், அவரை சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த செய்தியை நாம், ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

 

இந்த நிலையில், தான் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் நடிகர் ராதாரவி இருப்பதாக சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். டப்பிங் யூனியனின் தலைவராக இருக்கும் ராதாரவி, மீ டூ புகார் கொடுத்ததால் தன்னை நீக்கியுள்ளார். அவர் தன்னை எதிர்த்து பேசுபவர்களை நீக்கிவிடுவார், என்று சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், ஏற்கனவே தனக்கு ரெட் போடுவதாகவும் ராதாரவி மிரட்டியதாக, குற்றம் சாட்டியிருக்கும் சின்மயி, தனக்கு எந்தவித முன் அறிவிப்பு தராமலே யூனியனில் இருந்து நீக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.