தமிழன் மட்டுமே ஆளவேண்டும் - ’தாதா 87’ பட விழாவில் சினேகன் ஆவேசம்
தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்று ‘தாதா 87’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் சினேகன் ஆவேசமாக பேசினார்.
கலை சினிமாஸ் சார்பில் எம்.கலைசெல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் இப்படத்தின் கதையின் நாயகனாக சாருஹாசன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜனகராஜ், ஆனந்த் பாண்டியன், ஸ்ரீ பல்லவில், நவீன் ஜனகராஜ், கதிர், பாலா சிங், மனோஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியண்டர் லீ மார்ட்டி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காசி திரையரங்கில் நடைபெற்றது.
இதில் நடிகை கெளதமி, பாடலாசிரியர் சினேகன், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர் மனோஜ்குமார், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட ஏராளமான திரை பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சினேகன், ”காவிரி நீருக்காக பல வருடங்களாக தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மழை வெள்ளதால் அணைகள் நிரம்பி காவிரி நீர் வந்துவிட்டது. ஆனால் இங்கே நீரை சேமிக்க வழியில்லை. எல்லாம் வீணாக கடலில் போய் சேர்கிறது.
நீரை சேமிக்க முடியாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும். எதுக்குடா நீங்க இருக்கீங்க? என்று ஆவேசமாக பேசியவர், தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும், வாழட்டும், ஆனால் தமிழகத்தை ஆள்வது தமிழகனாக மட்டும் தான் இருக்க வேண்டும்.” என்றார்.