Jan 24, 2018 10:09 AM

எஸ்.எஸ்.ஆர் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’

எஸ்.எஸ்.ஆர் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் ஆர்.பி.எம்.சினிமாஸ்.

 

ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

 

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. 

 

ஒளிப்பதிவு - மனோகர், இசை - கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் - சொற்கோ, கலை - மனோ, நடனம் - எஸ்.எல்.பாலாஜி, ஸ்டண்ட் - ஆக்‌ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை - டி.பி.வெங்கடேசன். கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான ’யா யா’ படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள ’பாடம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

 

இப்படத்தை ராகுல் தயாரித்து இயக்குகிறார். ஜே.எஸ்.கே.கோபி இணை தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

 

படம் பற்றி இயக்குநர் ராகுல் கூறுகையில், “இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை. சோஷியல் மீடியா என்றழைக்கப் படும் சமூக வலை தளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான் கருத்துக்களை பதிவு செய். படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடை பெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும்.” என்றார்.