Oct 08, 2018 08:47 AM

ஹீரோவாக களம் இறங்கும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

ஹீரோவாக களம் இறங்கும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பிரபலமான செந்தில் கணேஷ், தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.

 

“சின்ன மச்சான் செவத்த மச்சான்..” என்ற பாடல் மூலம் செந்தில் கணேஷும், அவரது மனைவி ராஜலட்சுமியும் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்றதோடு, தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவியதோடு, சினிமாவிலும் பாட தொடங்கியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், செந்தில் கணேஷ் பாடகராக மட்டும் இன்றி ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார். “சின்ன மச்சான்..” என்ற பாடலை எழுதிய செல்ல தங்கையா இயக்கும் ‘கரிமுகன்’ என்ற படத்தில் தான் செந்தில் கணேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில் காயத்ரி என்ற கேரள பெண் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் யோகி ராம், பாவா லட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், திபாஸ்ரீ, ரா.கா.செந்தில் ஆகியோர் நடிக்க இயக்குநர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

 

எழில் பூஜித் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பன்னீர் செல்வம், கேசவன் படத்தொகுப்பு செய்ய, நித்தியானந்த் கலையை நிர்மாணிக்கிறார். சங்கர்.ஆர் நடனம் அமைக்க, திரில்லர் முருகன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சுப்பிரமணியம் கவனிக்க, ஏ விமல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.சித்திரைச்செல்வி, எம்.செல்வமணி, செந்தூர் பிலிம்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கும் செல்ல தங்கையா, படம் குறித்து கூறுகையில், “நானும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். எங்கள் குழுவைப்பற்றி எல்லோருக்குமே தெரியும்.

 

ஏற்கெனவே செந்தில் கணேஷை  நாயகனாக்கி ’திருடு போகாத மனசு’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து ’கரிமுகன்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவர் விஜய் டிவியில் பாடி புகழ் பெற்று விட்டார்.

 

இது எங்கள் குழுவினருக்கு மகிழ்ச்சி. ’திருடு போகாத மனசு’ படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இந்த படத்தில் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டுமானால், முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து முகம் தெரிந்த  இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது  என்பதும், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள், என்பதை கமர்ஷியல் காமெடியாக சொல்லி இருக்கிறோம்.

 

செந்தில் கணேஷ் எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார். படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களையும் பாடி இருக்கிறார்.

 

படப்பிடிப்பு புதுக்கோட்டை, கோட்டை பட்டினம், தேவிபட்டினம் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. கரிமுகன் படத்தின் முன்னோட்ட  வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.” என்றார்.