May 22, 2018 09:48 AM

ஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’!

ஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பல மர்மங்களோடு முடிந்த இந்த கொலை வழக்கை மையமாக வைத்து உருவாகியுள்ள படமே ‘நுங்கம்பாக்கம்’. ஜெய சுபஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கிறார்.

 

நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா, மனோ  இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

 

ஏ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும், பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

 

ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாம் டி.ராஜ் இசையமைத்திருக்கிறார். ஜெய்சங்கர் கலையை நிர்மாணிக்க, மாரி எடிட்டிங் செய்துள்ளார். கே.சிவசங்கர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, கதை மற்றும் வசனத்தை ஆர்.பி.ரவி எழுதியுள்ளார். இவர் விமல் நடித்த ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ மற்றும் ‘தற்காப்பு’ போன்ற படங்களை இயக்கியவர் ஆவார்.

 

இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் எஸ்.டி.ரமேஷ் செல்வன், படம் குறித்து கூறுகையில், “நாம் எவ்வளவோ படங்களை பார்க்கிறோம், அந்தப் படங்களின் காட்சிகளில் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு இருக்கும். பாடல் காட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து காட்சிகளுமே அந்தந்த இயக்குனரின் கற்பனைகள் மட்டுமல்ல, அவரவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாகவும் கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவும் இருக்கும்.

 

நுங்கம்பாக்கம் முழுக்க முழுக்க கற்பனை கதை தான். அதில் கொஞ்சம் நிஜ சம்பவங்களும் கலந்திருக்கும். நான் சினிமாவுக்கு வந்து எதையும் சம்பாதிக்க வில்லை நிறைய இழந்திருக்கிறேன். நிம்மதியையும் சேர்த்து. ஜெயிக்கனும்கிற வெறி இருக்கு, உழைக்கவும் செய்கிறேன், வெற்றி அருகில் தான் இருக்கிறது. அந்த வெற்றிக்கனியை இதில் பறிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

 

நிறைய பிரச்சனைகளை இந்தப் படத்தில் நான் சந்தித்திருக்கிறேன். சென்சார் செய்யப்பட்டு U/A கொடுக்கப் பட்டிருக்கிறது.

 

இந்தப் படத்தைப் பார்த்த தித்தீர் பிலிம்ஸ் கே.ரவிதேவன் படத்தின் மொத்த உரிமையை பெற்றிருக்கிறார்கள்.” என்றார்.