Feb 15, 2018 10:27 AM

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் முன்னிலையில் பாடப்பட்ட உள்ளூர் கவிஞரின் பாட்டு!

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் முன்னிலையில் பாடப்பட்ட உள்ளூர் கவிஞரின் பாட்டு!

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற “மோஜோ ரைஸிங்” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடலை முதல் முறையாக இசையமைப்பாளரும், பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி பாடினார்.

 

16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள், என பிரம்மாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக “தீரா தீராளே” பாடலைப் பாடி பலத்த கைத்தட்டல்களையும் வரவேற்பையும் அஞ்சு பிரம்மாஸ்மி பெற்றார்.

 

சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப் பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருக்கிறார். அஞ்சு பிரம்மாஸ்மி இசையமைத்து பாடும் “இன்விக்டஸ்” (InvictuZ) ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார் முருகன் மந்திரம். “இன்விக்டஸ்” ஆல்பத்தில் இடம் பெறும் பாடல்களில் ஒன்று “தீரா தீராளே”.

 

இது பற்றி முருகன் மந்திரம் கூறுகையில், “இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம். சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு அன்பான தோழியும் கூட. தீரா தீராளே பாடல், புரட்சிப்பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதல் முறையாக பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.” என்றார்.