Sep 26, 2017 10:53 AM

மத்திய அரசுக்கு விஜய் சேதுபதி எதிர்ப்பு!

மத்திய அரசுக்கு விஜய் சேதுபதி எதிர்ப்பு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக தான்யா நடிக்க, பசுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏம்.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படத்தை பிக்சர் பாக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 

நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, “இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக கருப்பன் இருக்கும். படத்தில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், ஒரு அழகான குடும்ப உறவையும், கணவன் - மனைவிக்கு இடையே உள்ள அன்பையும் ரொம்ப சிறப்பாக வெளிக்காட்டும் ஒரு படமாக வந்திருக்கிறது.

 

இதுபோன்ற மசாலா படங்களில் நடிக்க எனக்கும் ரொம்ப நாளாக ஆசை தான். ஒரு நடிகன் என்றால் அனைத்துவிதமான படங்களிலும் நடிக்க வேண்டும். அப்படிதான் இது போன்ற மசாலா படங்களிலும் நடிக்க எனக்கு ஆசை. சொல்ல போனால் இதுபோன்ற மசாலா படங்களில் நடிப்பது தான் ரொம்ப கஷ்ட்டம். எதார்த்தமாக நடித்துவிடலாம். ஆனால், பத்து பேரை அடிப்பது போல ரியாக்‌ஷன் கொடுப்பது என்பதெல்லாம் ரொம்ப கஷ்ட்டமான விஷயம் அதை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். அதேபோல், இந்த கதை நம் மண் சார்ந்த கதை என்பதால், மக்களிடம் ரொம்ப எளிதாக சென்றடையும்.” என்றார்.

 

அப்போது நிருபர் ஒருவர், நீட் தேர்வு, நவோதயா போன்ற விஷயங்களில் மாநில அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இந்த நேரத்தில் உங்களுக்கு தேசிய விருது கிடைத்தால் ஏற்பீர்களா? என்று கேட்க, ”நீட் தேர்வால் நாம் ஒரு உயிரை பலி கொடுத்து இருக்கிறோம். இந்த தருணத்தில் நான் விருதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். விருதை விட என் மக்களின் உணர்வே முக்கியம்.” என்று விஜய் சேதுபதி பதில் அளித்தார்.

 

மேலும், விஜய் சேதுபதிக்கு தான் நடித்த படம் திருவிழாக்காலங்களில் வெளியாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். அதை கருப்பன் நிறைவேற்றியிருக்கிறது. ஆம், 29 ஆம் தேதி ஆயுதபூஜை விழா.