Aug 04, 2017 06:02 AM

ஆக்கம்

croppedImg_675011281.jpeg

Casting : சதிஷ் ராவண், டெல்னா டேவிஸ், ரஞ்சித், பவர் ஸ்டார் சீனிவாசன்

Directed By : வேலுதாஸ் ஞானசம்மந்தம்

Music By : ஸ்ரீகாந்த் தேவா

Produced By : ஆதி லக்‌ஷ்மி பிலிம்ஸ், இ.செல்வம், இ.ராஜா

சென்னை, ஆக.04 : ”எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அண்ணை வளர்ப்பதிலே...” என்ற கருத்துள்ள வரிகளை காட்சிகளாக்கியிருக்கும் படமே ‘ஆக்கம்’.

 

திருட்டு செயல்களில் ஈடுபட்டு வரும் ஹீரோ சதிஷ் ராவண், பணம் என்றால் போதும் சொந்தமோ பந்தமோ, நண்பரோ பகைவரோ அபேஷ் செய்துவிடுவார். யாரைப் பற்றியும் எதை பற்றியும் கவலைப்படாமல் குற்றங்களை செய்துக்கொண்டு வாழ்ந்து வரும் அவரை கண்டிக்க வேண்டிய அவரது அம்மாவோ, “இப்படி சிறு சிறு திருட்டு கேஸுக்காக ஜெயிலுக்கு போவத நிறுத்திட்டு, பெருஷா எதாவது செய்டா...” என்று ஊக்கம் கொடுக்க, சதீஷ் ராவண், ஒரு தாதாவிடம் வேலைக்கு சேர்ந்து, அவர் கை காட்டும் ஆட்களை போட்டு தள்ளுவது, அவர் சொல்லும் வேலையை செய்வது என்று இருக்க, சில ஆண்டுகளிலேயே வட சென்னையின் பெரிய ரவுடியாகவிடுகிறார்.

 

இதற்கிடையே, அவரை காதலிக்கும் ஹீரோயின் டெல்னா டேவிஸை சதீஷ் ராவண், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட டெல்னா டேவிஸ் கர்ப்பமாகிவிடுகிறார்.

 

இந்த நிலையில், சதிஷ் ராவணின் நண்பர்களை ஒவ்வொருவரக அவர்களுடன் இருக்கும் சின்ன பையன் கொலை செய்ய, சதிஷ் ராவணையும் கொலை செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருக்க, மறுபுறம் போலீஸும் சதிஸ் ராவணுக்கு நேரம் குறிக்க, இவர்களிடம் இருந்து சதிஷ் ராவண் தப்பித்தாரா இல்லையா, அந்த சின்ன பையன் எதற்காக சதிஷ் ராவண் மற்றும் அவரது நண்பர்களை கொலை செய்கிறான், கர்ப்பமடைந்த ஹீரோயினின் நிலை என்ன ஆனது என்பதே ‘ஆக்கம்’ படத்தின் மீதிக்கதை.

 

சவால் மிகுந்த வலுவான கதாபாத்திரத்தை தனது முதல் படத்திலேயே ஏற்றுள்ள அறிமுக நாயகன் சதிஷ் ராவண், தனது வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். ஆக்‌ஷன், நடனம், நடிப்பு என்று அனைத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கும் சதிஷ் ராவண், ஹீரோ - வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் அமர்க்களப்படுத்துகிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சியிலும், சாவுக்கு நடனம் ஆடும் போதும், தனது ரியாக்ஸன்கள் மூலம் மிரட்டுபவர், பெண்களை சைட் அடிக்கும்போது வடசென்னை சாக்லெட் பாயாக மாறிவிடுகிறார். மொத்தத்தில் எந்த வேடமாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு நடிகரா திகழ்வார் என்ற நம்பிக்கையை தனது நடிப்பு மூலம் ஏற்படுத்திவிடுகிறார்.

 

ஹீரோயின் டெல்னா டேவிஸ், எளிமையான அழகால் ரசிகர்களை கவர்வது போல, தனது அப்பாவித்தனமான நடிப்பாலும் கவர்ந்துவிடுகிறார். முக்கிய வேடமாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்த ரஞ்சித்தின் கதாபாத்திரம் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்றாலும், மெசஜ் சொல்ல பயன்பட்டிருக்கிறது. ஹீரோவின் நண்பர்களாக நடித்தவர்கள், அம்மாவாக நடித்திருப்பவர் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார்கள்.

 

சும்மாவே அடித்து நொருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, வட சென்னை பின்னணியைக் கொண்ட படம் என்றால் சும்மாவா இருப்பார், கிழி கிழி என்று கிழிக்கிறார். என்ன அவரது கிழிப்பால் பாடல் வரிகளின் சத்தம் குறைந்து, அவரது இசையின் சத்தம் தான் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக முருகன் பற்றிய அந்த முதல் பாடலின் வரிகள் கவனிக்கும்படியாக இருந்தாலும், வரிகளை சரியாக கேட்காதபடி செய்துவிடுகிறது ஸ்ரீகாந்த் தேவாவின் சத்தம்.

 

ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவ சுந்தர், படத்தின் மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு தனது பணியை செய்திருக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் காட்சிகளாகட்டும், தேர்வு செய்யப்பட்ட லொக்கேஷன்களாகட்டும் அனைத்தும் ஒரினலாக இருப்பதோடு, டெரராகவும் இருக்கிறது. 

 

இசை, ஒளிப்பதிவு என்று இரண்டுமே திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு நகர்ந்தாலும், படத்தொகுப்பு தான் சில இடங்களில் பாதகம் செய்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை அப்ளாஷ் வாங்கும் அளவுக்கு வெட்டியிருக்கும் எடிட்டர், மொத்த படத்தையும் வெட்டுவதில் திணறியிருப்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.

 

எந்த சூழலில் வாழ்ந்தாலும், குழந்தைகளை பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் அவர்கள் நல்லவர்களாவதும், தீயவர்களாவதும் இருக்கிறது, என்பதை எந்தவித எஷன்ஸும் கலக்காமல் எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் வேலுதாஸ் ஞானசம்மந்தம்.

 

தான் சொல்ல வந்த கருத்தை ரொம்ப அழுத்தமாக சொல்ல வேண்டும், அதே சமயம் புதுப்பேட்டை போன்று ராவாகவும் படம் இருக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர் ஏகப்பட்ட காட்சிகளை படமாக்கிவிட்டு, அதில் எதை வைப்பது, எதை நீக்குவது, எந்த இடத்தில் எதை வைப்பது என்று தடுமாறியிருக்கிறார். இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதைக்குள் வருபார் கிளைமாக்ஸின் போது நல்ல மெசஜை சொல்வதோடு, படம் முழுவதும் வில்லனாக பார்க்கப்படும் சதிஷ் ராவணை ரசிகர்கள் மனதில் ஹீரோவாக பதிய வைப்பவர், படிப்பு எவ்வளவு முக்கியம், அது நமது வாழ்வை எப்படி மாற்றும், என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

வடசென்னை பின்ணணி கதைக்களம் என்றாலே தாதா, அவரை போட்டு தள்ளிவிட்டு ஹீரோ தாதாவாது, பிறகு அவரை பழிவாங்க துடிக்கும் எதிரி, என்பதை போல, இப்படத்தின் திரைக்கதை நகர்வு இருந்தாலும், காட்சிகளின் மூலம் மிரட்டியிருக்கும் இயக்குநர் வேலுதாஸ், இதுவரை வடசென்னை பின்னணியில் சொல்லப்படாத ஒரு மெசஜை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில் இந்த ‘ஆக்கம்’ இளைஞர்களைக் காட்டிலும் தாய்மார்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்