Sep 18, 2018 05:35 PM

75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’

11b23fb12083dbfd0a6181b6e6adba34.jpg

ராஜ் தொலைக்காட்சியில்  ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் திங்கள்  முதல் வியாழன் வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘ஹலோ சியாமளா’ மெகா  தொடர் 75 வது எபிசோடை நெருங்குகிறது.

 

தங்களது மூத்த மகளுக்கும் இரண்டாவது மகளுக்கும் திருமணம் பேசி முடிகின்றனர் ராமச்சந்திரனும் ஷியாமளாவும். இந்தநிலையில் மூலிகை வைத்தியத்திற்காக கோவைக்கு கிளம்பி செல்கின்றனர் பெற்றோர் இருவரும்.  மூத்த மகள் சித்ராவும் மூன்றாவது மகள் மஞ்சுவும் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர். அப்போது இளையவள் மஞ்சு திடீரென வாந்தி எடுக்கிறாள். அதிர்ந்துபோன சித்ரா மஞ்சுவை உலுக்கி எடுக்கிறாள் . தான் சில நாட்களுக்கு முன் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டதையும் ட்ரிங்ஸ் அருந்தியதையும் கூறுகிறாள் மஞ்சு. இதனால் சித்ராவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதை உறுதிசெய்துகொள்ள, வேறு டாக்டரிடம் அழைத்து சென்றால் தங்கள் குடும்ப மானம் கப்பலேறிவிடும் என பயந்து, தனக்கு மாமியாராக வரப்போகும் டாக்டர் ஊர்மிளாவிடமே மஞ்சுவை அழைத்து செல்கிறாள். அங்கே மஞ்சு கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறார் டாக்டர் ஊர்மிளா. 

 

இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஏற்பாடாகியுள்ள நிலையில் மூன்றாவது பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை என தெரிந்தால் இதய நோயாளியான தந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என தனது வருங்கால மாமியாரிடம் கோரிக்கை வைக்கிறாள் சித்ரா. மேலும் தான் போலீஸ் என்பதால் எப்படியாவது இதற்கு காரணமானவன் யார் என்பதை கண்டுபிடித்து இந்த பிரச்சனையை சரிசெய்வதாகவும் கூறுகிறாள்.அதற்கு டாக்டரும் ஒத்துழைப்பதாக தெரிவிக்கிறார். இந்தநிலையில் வைத்தியத்திற்காக கோவை சென்றிருந்த பெற்றோர்கள் வீடு திரும்புகின்றனர்.  பிறகு என்ன நடந்தது  என்கிற சுவாரஸ்யங்களுடன் ‘ஹலோ சியாமளா’. 

 

இத்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் ‘ஈரமான ரோஜாவே’ சிவா, தீபா, அகிலா, கிருத்திகா, நிவிஷா,  திவ்யா  நடிக்க, ரவி சுந்தரம்  ஒளிப்பதிவு செய்ய கோபி.ஆர் இயக்குகிறார்.