’டாக்ஸிக்’ படத்தின் “தடுமாறதே…” பாடல் வெளியானது

மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations) – கே வி என் புரொடக்ஷன்ஸ் ( K V N Productions) மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ( Zee Music Company) ஆகியவை இணைந்து, யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘டாக்ஸிக்’.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படங்களில் ஒன்றான இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ’“தபாஹி…” பாடலின் அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, ”தடுமாறுதே…” எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘தபாஹி’ பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. ‘தபாஹி’ பாடல் – தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில்… ‘தடுமாறுதே’ பாடல்- மென்மையான உணர்வுகள்- ஏக்கம்- சொல்லப்படாத விசயங்கள் – என மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் உணர்வு பூர்வமான தளத்தை விவரிக்கும் இந்த பாடல்- ஒவ்வொரு காதல் கதையும் பல லேயர்களை கொண்டது என்பதையும், அதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.

யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள ‘தடுமாறுதே’ பாடல் – ராயா மற்றும் ரெபெக்காவின் உறவை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் இணக்கமான நடிப்பில் ஒருவித விளையாட்டுத்தனம் மிகுந்த இயல்பு வெளிப்பட்டாலும்… அதற்குள் உணர்வுபூர்வமான முரண்பாடுகளும், பகிர்ந்து கொள்ளப்படாத ஏக்கமும் மறைந்திருக்கின்றன.

‘தபாஹி’ பாடலில் ரசிகர்கள் பார்த்த அதே ராயாவாக அவர் தொடர்ந்தாலும்… ரெபெக்காவை அவர் நேசிக்கும் விதம், அவரது மென்மையான மற்றும் கவலையற்ற பக்கங்களை வெளிப்படுத்துகிறது. அதே தருணத்தில் தனக்குள் அவர் சுமந்து கொண்டிருக்கும் குழப்பத்தையும் உணர்த்துகிறது.

தனிஷ்க் பாக்சி- அர்ஸ்லான் நிஜாமி- ஃபஹீம் அப்துல்லா ஆகிய புகழ்பெற்ற மூவர் கூட்டணியால் இசையமைக்கப்பட்டுள்ள இந்த காதல் பாடல் – சித்தார்த் பஸ்ரூரின் உணர்வுபூர்வமான குரலில் உயிர் பெற்றுள்ளது. இவர் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் தனது குரலில் பாடியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்.. ‘மதோஷ்’ (இந்தி), ‘மனமோஹகா’ (கன்னடம்), ‘மனசகதே’ (தெலுங்கு), ‘தடுமாறுதே’ (தமிழ்), ‘மதுமோஹினி (மலையாளம்) ஆகிய பெயரில் வெளியாகி உள்ளது. பாடலுக்கான வரிகளை பிரபல எழுத்தாளர்களான பிரமோ மரவந்தே ( கன்னடம் ) அர்ஸ்லான் நிஜாமி – சையத் முராத் கிலானி (இந்தி), ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) விக்னேஷ் சிவன் (தமிழ்), ராஜீவ் கோவிந்தன் (மலையாளம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.

யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்கும் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் திரைப்படம் -மிகச்சிறந்த நட்சத்திரக் கூட்டணியை கொண்டிருக்கிறது.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி கூறுகையில், ”அர்ஸ்லான் நிஜாமி – ஃபஹீம் ஆகியோருடன் நான் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளதால் ‘தடுமாறுதே’ பாடல் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதிலும் ‘டாக்ஸிக்’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. மிகுந்த திறமைசாலியான சித்தார்த் பஸ்ரூருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் இப்பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார். ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான பயணத்தை இப்பாடல் அழகாக காட்சிப்படுத்துகிறது. காதல்- ஏக்கம் மற்றும் காதலின் விளையாட்டுத் தனமான உணர்வுகள் இதில் வெளிப்பட்டுள்ளன. நாங்கள் இந்தப் பாடலை உருவாக்கிய போது எவ்வளவு ரசித்தோமோ… அதே அளவு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

இந்த பாடல் குறித்து பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் கூறுகையில், “தடுமாறுதே ..என்பது சாதாரணமாக காதலில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது பிரிவை பற்றியது மட்டுமல்ல. இருவருக்கும் இடையே சொல்லப்படாமல் இருக்கும் உணர்வுகளை பற்றியது. இப்பாடல் முழுவதும் ஏக்கமும்… மென்மையான உணர்வுகளும்… இழையோடுகின்றன. வலியை மட்டும் வெளிப்படுத்தாமல்.. அந்த உண்மையான உணர்வுகளை எனது குரல் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது உணர்வுபூர்வமானது என்றாலும் .. இதில் படிப்படியாக அதிகரிக்கும் ஒரு தீவிர தன்மையும் உள்ளது. அதுவே எனக்கு இப்பாடலை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது.” என்றார்.

யாஷ் & கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ‘ (Toxic A Fairy Tale for Grown -Ups) திரைப்படம் – கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

pan india movie toxicthadumarathe song in toxictoxicyashmடாக்ஸிக்தடுமாறாதே பாடல் வெளியானதுயாஷ்
Comments (0)
Add Comment