Latest News :

பிரச்சனைகளுக்கு ஆர்.கே.செல்வமணியின் சூழ்ச்சி தான் காரணம்! - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை
Friday April-11 2025

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறியிருப்பதாவது:

 

09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியுள்ளார் அது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்க வேண்டியும் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட  தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தனிமைப்பு அதேபோல் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது ஒரு தனி அமைப்பு என்ற அர்த்தத்தில் தான் நாங்கள் கூறினோம் என்பதை ஆர்கே செல்வமணி அவர்கள் நன்கு புரிந்து இருந்தும் அது தவறாக புரிந்து கொண்ட மாதிரி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பு பற்றி தரம் தாழ்ந்து சொல்லி இருப்பது அனைத்து தொழிலாளர்களையும் அவமதிக்கும் செயலாகும். எத்தனையோ சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள போதும் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை பற்றி திரு செல்வமணி ஏன் பேச வேண்டும் இந்த கூட்டமைப்பை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் ஒரு டுபாக்கூர் சங்கம் என்றால் அதனை பற்றி மீடியாக்களில் ஏன் திரும்பத் திரும்ப பேசி பெரிதாக வேண்டும். அவரது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதனை ஆர்.கே. செல்வமணி அவர்கள் தற்போது தயாரிப்பாளர்களை இரண்டு பிரிவாக பிரித்து தன் பதவியை வைத்து தொழிலாளருக்கு துரோகம் இழைத்து வருகிறார்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தான் காலம் காலமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு வருகிறது. அந்த வகையில் ஆர் கே செல்வமணி அவர்கள் கடந்த மூன்று முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஊதிய உயர்வையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தான் வாங்கிக்கொண்டு, தற்போது எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து சென்ற நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சில சுயநலமிக்க நிர்வாகிகளுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இனி நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து  பரிந்துரை கடிதம் பெற்று வந்தால் தான் படப்பிடிப்புக்கு வருவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? முதல் போடும் ஒரு தயாரிப்பாளர் தொழிலாளர்கள் சங்கத்தில் சென்று கடிதம் அளிக்க வேண்டிய சூழ்நிலையை ஆர்.கே.செல்வமணியும், நடப்பு சங்க செயலாளர் டி. சிவா உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

 

தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக தாய் சங்கத்திலிருந்து பிரிந்து சென்று ஆரம்பிக்கப்பட்ட சங்கம் தான் தமிழ் திரைப்படம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அத்தைய சங்கத்தில் ஆர்கே செல்வமணி அவர்கள் தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்திற்காக பெப்சியில் உள்ள 23 சங்கங்களில் இருக்கும் 25 ஆயிரம் தொழிலாளர்களையும் அடமானம் வைத்துள்ளார். அதேபோல தயாரிப்பாளர்களையும் திரு சிவா அவர்கள் அவருடைய சுயநலத்திற்காக தொழிலாளர்கள் சம்மேளனத்தி ல்  அடமானம் வைப்பதற்காக இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியே இத்தனை பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் என்பதை ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இன்றைக்கு பெரிய திரைப்படங்கள் தயாரிப்பது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் என்று டி சிவா அவர்களும் மற்ற நிர்வாகிகளும் திரு செல்வமணி அவர்களும் சேர்ந்து ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் மட்டுமே ஏனெனில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் மட்டுமே படமாக்கப்படுகிறது. அதனால் நம் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது இதனை புரிந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் திரு செல்வமணி அவர்களின் பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரடெக்ஷன் பணிகளை நிறுத்தி வருகிறார்கள்.

 

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். தமிழ்த்துறை உலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை அரவணைத்தே செயல்படும் என்பதற்கு சாட்சியை இந்த தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகும். ஆகவே உண்மைக்கு புறம்பாகவே மீடியாக்களில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் திரு செல்வமணி அவர்களின் எண்ணங்களும் செயல்களும் என்றைக்கும் ஈடெராது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் சம்மேளனத்தில் கடிதம் கொடுத்து படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார். அதுவும் உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும். திரு ஆர் கே செல்வமணி அவர்கள் தலைமையில் உள்ள தற்போதைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகம் தான்  படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ள தயாரிப்பாளர்களிடம் அவர்களுடைய புரொடக்ஷன் மேனேஜர்களை வைத்து வலுக்கட்டாயமாக கடிதங்கள் வாங்கி உள்ளார்கள். புரடக்ஷன் மேனேஜர்கள் என்பவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பணிகளை கவனிக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் ஆர்கே செல்வமணி யின் கைப்பாவையாக இருக்கிறார்கள் என்பதை மிகவும் வேதனைக்குரியது.

 

மேற்படி பிரச்சனை குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களையும் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் விளக்கமாக கூறியதின் அடிப்படையில் காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

10416

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Tuesday April-15 2025

அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் 'மைனே பியார் கியா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது...

’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!
Tuesday April-15 2025

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கானா விளக்கு மயிலே’ பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர்...

மூன்று சிறுவர்களின் உணர்ச்சிப் போராட்டத்தை சொல்லும் திரைப்படம் ’நாங்கள்’! - ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது
Tuesday April-15 2025

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய 'நாங்கள்' திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறார்...

Recent Gallery