Latest News :

வீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு!
Thursday June-21 2018

சமூக போராளி டிராபிஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

இது குறித்து கூறிய கமல்ஹாசன், “அஹிம்சைதான்  சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா.மகாவீரர் காலத்தில் தொடங்கி  இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப்   பார்த்திருக்கிறோம் .ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கார் பற்றியும் தெரியும். இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம்  சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு  காலத்திலும் , ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம்.  இவர்களால் தான்  இந்தியச் சக்கரம்  சுழல்வதாக  நம்புகிறேன். 

 

மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள்  தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை  பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல  சித்தரித்ததுண்டு. ஆனால் டிராஃபிக் ராமசாமி . எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார் . அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய  வீரர் இவர்.   அப்படிப் பட்டவரை  இருக்கும் போதே படமாக்கும் முயற்சி , அதுவும் அவரே பார்த்துப்  பாராட்டி ரசிக்கும் படி படமாக எடுத்திருப்பது  பாராட்டுக்குரியது.  படக் குழுவுக்கு இதுவே முதல் வெற்றி . அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும்.

 

 எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில்  படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல்  படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த  மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது.

 

அவரே ஒரு இயக்குநராக இருந்தும்  விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து   அவருக்கும்  ஒரு தொடக்கம் அமைத்து  இருப்பது பாராட்டுக்குரியது.

 

நடந்து முடிந்த கதையை படமாக்கும் போது சிலவற்றை வளைக்கலாம்.  ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப்  படமாக எடுப்பது சிக்கலானது.  நடந்த ஒரு கதையை `ஹேராம்` படமாக நான்  எடுத்த போது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்.

 

ஒரு படத்தில் முதலில் பாத்திரப்  பொருத்தம்  அமைவது கடினம்.பெரிய நடிகர்களுக்கே சில நேரம் அமையாமல் போனதுண்டு. இந்தப் படத்தில்  பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சியும்இந்த  டிராஃபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும் போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். பிற்காலத்தில் அடுத்த தலைமுறை  ஒரிஜினல் யார் என்று தெரியாமல் இவரையே டிராஃபிக் ராமசாமியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடும். அதில் தவறில்லை. அந்தப் பெயரும் உணர்வும் தான்  ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவை.  இப்படிப்பட்ட மனிதர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி . டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும். இந்தியாவின்  வெற்றி  இந்த மாதிரி சாமான்ய வீரர்களால் தான்.  

 

படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போதே  முழுப் படமும் பார்த்த மாதிரி உணர்ந்தேன் . முழுப்படத்தையும் பார்க்க வேண்டும்  என ஆவல் வந்தது.  `போராளி` என்று ஒரு  பாடல் `கோமாளி `என்று ஒரு  பாடல் பார்த்தோம். இவரை கோமாளியாக்க எத்தனையோ  பேர் குறிப்பாக அரசியல்வாதிகள் முயன்று தோற்றுவிட்டனர் என்பது தான் உண்மை. அந்தத் தோல்வியை மேலும் பிரஸ்தாபிக்கும் வகையிலும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக்  காட்டும் வகையிலும் இந்தப் படம் இருக்கும்.

 

எஸ்.ஏ.சி. தேர்ச்சி பெற்ற இயக்குநராக இருப்பவர் நடிகராகவும் இருந்து இயக்குநருக்கு உறுதுணையாகவும்  இருந்திருக்கிறார், எல்லாம் நன்றாக அமைந்துள்ளன. இப்படத்தை ஓட்டிக் காட்ட வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உள்ளது.

 

மீண்டும் சொல்கிறேன்  வீரத்தின்  உச்சகட்டம்தான்   அஹிம்சை, அதற்கு உதாரணம் ’டிராஃபிக் ராமசாமி’” என்றார்.

Related News

2853

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery