Latest News :

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான புதிய மாஸ்டரிங் யூனிட்! - விஷால் திறந்து வைத்தார்
Thursday January-24 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு என்று தனியாக புதிய மாஸ்டரிங் யூனிட் ஒன்று சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மைக்ரோப்ளக்ஸ் (Microplex) நிறுவனத்தின் சென்னை கோடம்பாக்கம் அலுவலகத்தில் 5000 சதுர அடியில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த அலுவலகம் மற்றும் மாஸ்டரிங் யூனிட் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

 

இதில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் கதிரேசன், துணை தலைவர் பார்த்திபன் மற்றும் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். 

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் பேசுகையில், “மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு செலவுகள் குறையும்.  குறிப்பாக சிறு பட தயாரிப்பாளர்கள் மிகுந்த பயனடைவார்கள். தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மைக்ரோப்ளக்ஸ் ஆல்பர்ட்-க்கும், ப்ரைம் போக்கஸ் ரஞ்சித்திற்கும் நன்றி.” என்றார்.

 

மைக்ரோப்ளக்ஸ் ஆல்பர் பேசும் போது, ”தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு மாஸ்டர் யூனிட் வேண்டும் என விஷால் என்னிடம் பல முறை கூறியிருக்கிறார். இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றார். ரூபாய் 2 லட்சம் செலவழித்து சங்கத்தை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சியை புரிந்துகொண்டு இந்த வசதியை செய்து தர ஒப்புக்கொண்டேன். பராமரிப்பு செலவைத் தவிர மற்றவைக்கு கட்டணம் கிடையாது. அதேபோல், 7 கோடி ரூபாய்க்கு கணக்கையும் சமர்ப்பித்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவார்.” என்றார்.

 

சங்கத்தின் துணை தலைவர் பார்த்திபன் பேசும் போது, “ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முதன்மையாகக் கருதுவது திருமணம் தான். ஆனால் அதைவிட தலைவர் பொறுப்பில் இருக்கும் போதே சங்கத்திற்கு சிறந்ததை செய்துவிட வேண்டும் என்கிற விஷாலை நான் தரிசிக்கிறேன். ஆல்பர்ட் உடனும், ரஞ்சித்துடனும் அவர் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதைவிட தெளிவாக, சங்கத்திற்கு நன்மை செய்துவிட முடியுமா? என்று ஆச்சரியமாக இருந்தது. இதில் அரசியல் இல்லை. நான் யாருக்கும் விரோதி அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மிகப்பெரிய தொகையை வைப்பு நிதியாக சேமித்து வைக்க நினைக்கும் விஷாலின் திட்டத்திற்கு எனது பங்களிப்பும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி.” என்றார்.

 

Mastering Unit

 

சங்கத்தின் செயலாளர் துரைராஜ் பேசும்போது, “நீண்ட நாட்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வேண்டும் என்பது விஷாலின் கனவு. இன்று அதை நிறைவேற்றியிருக்கிறார் விஷால். பல ஆண்டுகளாக கொத்தடிமைகள் போல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. அதற்கு உதவிபுரிந்த இரு நிறுவனங்களுக்கும்  நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பேசுகையில், “இந்த 'மைக்ரோப்ளக்ஸ்' வசதி 'ஐடி'  நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாகஇலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக 'மைக்ரோப்ளக்ஸ்' ஆல்பர்ட்-க்கு நன்றி.

 

இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் அலுவலகம் இருக்கிறது. ஆனால், இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கு வாடகை கிடையாது.

 

தமிழ் திரையுலகத்திற்கு  மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோப்ளக்ஸ்-ன் ரஞ்சித்தை வரவேற்கிறேன். அதேபோன்று, 'ப்ரைம் போக்கஸ்' உடன் இணைவதிலும் மகிழ்ச்சி. ஏனென்றால், தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ப்ரொஜெக்டருக்கு செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போதுதான் ப்ரைம் போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் அந்த தொகையைக் குறைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கித் தந்தவர் ஆல்பர்ட். மேலும் ஒரு சிறப்பம்சம் 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டர் இருக்கிறது. அதை சென்சார் மற்றும் திரைப்பட வெள்ளோட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

 

நான் படம் தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் புரிந்தது. ஆனால், அவர்கள் தயாரிக்காமலே தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இந்த சலுகையை அளித்திருக்கிறார்கள்.

 

இப்படிபட்ட நண்பர்களை இழந்து விடாமல் எல்லோரும் நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவிதமான தடையாக இருந்தாலும் அதை உடைத்து விடலாம்.

 

எந்த விஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வது தான் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். எங்களுக்கென்று ஒரு அலுவலகம் அமைந்திருக்கிறது.  'இளையராஜா 75' விழா பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் YMCA நந்தனத்தில் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவை இசைஞானிக்காக நடத்துவதில் பெருமையடைகிறேன். இப்படிப்பட்ட மாமனிதருக்கு விழா எடுப்பது எல்லோருடைய கடமை.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மென்மேலும் வளரணும். அதனுடன் சேர்ந்து மைக்ரோப்ளக்ஸ்-ம், ப்ரைம் போக்கஸ்-ம் வளரணும்.” என்றார்.

 

மேலும், பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ‘இளையராஜ 75’ நிகழ்வில் முக்கிய அறிவிப்பை விஷால் வெளியிட இருப்பதாகவும் நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

Related News

4120

இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘அரண்மனை 2’ ஒடிடி தளத்தில் வெளியானது!
Saturday June-22 2024

சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையோடு, ரூ...

சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘மிஸ் யூ’!
Saturday June-22 2024

’சித்தா’ என்கிற உணர்வுப்பூர்மான கதையம்சம் கொண்ட வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘மிஸ் யூ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

சன்னி தியோல் மற்றும் கோபிசந்த் மிலினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 ஆம் தேதி தொடங்குகிறது!
Thursday June-20 2024

இந்தியாவையே தன் ’கதர் 2’  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார்...