Latest News :

வெற்றி பெற்றால் கூட்டமாக இருக்கும், தோற்றால் தனியா இருப்போம் - சிவகார்த்திகேயன் உருக்கம்
Monday June-03 2019

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது சமீபத்திய படங்கள் மூலம் சில சறுக்கல்களை சந்தித்து வந்தாலும், தான் தயாரிக்கும் படங்கள் மூலம் அதை சமாளித்து விடுகிறார். அப்படி அவர் தயாரித்த முதல் திரைப்படமான ‘கனா’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. அறிமுக இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரியோ ராஜ், ஷரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

ஷபீர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “கனா படத்தை ஆரம்பிக்கும்போது நண்பர்களுக்காக செய்தோம். அடுத்து யூடியூபில் கலக்கும் ஆளுமைகளை வைத்து படம் பண்ணனும்னு ஆசை. தொலைக்காட்சியில் இருந்து வந்தவன் நான், அப்படி தொலைக்காட்சியில் இருந்து வரும் கலைஞர்களை வைத்து படம் செய்யவும் ஆசை. அந்த இரண்டும் இந்த ஒரே படத்தில் அமைந்திருக்கிறது. என் ஃபோனில் 4 வருடமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல் தான் ரிங்டோன். அதே இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். 50 க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக். அவர்களின் ஆசி உங்களுக்கு நிச்சயம் இருக்கும். நல்ல இயக்குநருடன் சேர்ந்து வேலை செய்யலாம், ஆனால் நல்ல மனிதருடன் சேர்ந்து வேலை செய்வது அரிது. நாஞ்சில் சம்பத், மயில்சாமி போன்ற சீனியர்களும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்கள். இந்த குழுவுக்கு யுகே செந்தில் சார் ஒரு கேப்டன் போல வழி நடத்தி சென்றிருக்கிறார். 

 

கனா படம் மிகப்பெரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது, ஷங்கர் சார் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கனா பட இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த மேடையில் எங்கள் தயாரிப்பு எண் 3ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். அந்த படத்தை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். என்னோட கடந்த படம் சரியா போகல, ஆனால் அடுத்தடுத்த படங்கள் அப்படி இருக்காது, நல்ல படங்களாக இருக்கும். வெற்றி பெறும்போது அணியாக தெரியும், தோற்கும்போது தனியா இருப்பது போல தெரியும். ஆனாலும் அப்போதும் கூட நிற்பது ரசிகர்களாகிய நீங்கள் தான்.” என்றார்.

 

இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத பேசுகையில், “தகுதியுள்ள தமிழர்களின் வரிசையில் வைத்து போற்றப்படும் ஒரு இடத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். மேடைப்பேச்சில் 42 தங்கப்பதக்கங்களை வென்றவன் நான். என்னை காயப்படுத்த வேண்டும் என ஒரு செய்தி தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் சொன்ன துப்புனா துடைச்சிக்குவேன் என்ற பதில் தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. யுகே செந்தில்குமார் அவர்களை பார்த்தால் எந்த கவலையும் பறந்து போய் விடும். என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில் பிளாக்‌ ஷீப்புக்கும் பங்கு உண்டு. சினிமாவுக்கு நான் அன்னியமானவன், இந்த படம் எனக்கு இரண்டாவது படம். சினிமா உலகத்தில் இனிமேல் நாஞ்சில் சம்பத்துக்கு எண்ட் கிடையாது.” என்றார்.

 

Nenjamundu Nermaiyundu Odu Raja

 

இசையமைப்பாளர் ஷமீர் பேசுகையில், “4 வயதில் நான் தென்பாண்டி சீமையிலே பாடலை கேட்டால் தான் தூங்குவேன், 12 வயதில் கீபோர்டு வாங்கி நான் வாசித்த முதல் பாடலும் அது தான். நம்மை அந்த அளவுக்கு பாதித்திருக்கிறார் இளையராஜா. நம் ஆழ்மனதில் பதிந்திருக்கிறார். இந்த படத்திலேயும் இரண்டு இடத்தில் அவர் இசை இருக்கும். என் முதல் படத்தில், என் பாடலை வெளியிட்டவர் சிவகார்த்திகேயன், இன்று அவர் தயாரித்துள்ள படத்திற்கு நான் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சி.” என்றார்.

 

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில், “இந்த நாளுக்காக நான் நிறைய ஏங்கியிருக்கிறேன், என் கனவை நனவாக்கியது சிவகார்த்திகேயன் சார். அவர் எங்களுக்கு கொடுத்தது வாய்ப்பு மட்டுமல்ல, எல்லோரிடமும் பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறார். இது ரொம்ப ஜாலியான ஒரு படம். கதை என்பது நாம் பயணிக்கும் வழியில் கிடைக்கும் விஷயங்களில் இருந்து உருவாவது தான். வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து திருடப்பட்ட கதை தான் இது. மொத்த குழுவும் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார்கள். ரியோவை விட்டு விட்டு இந்த கதையை யோசிக்கவே முடியவில்லை. நாயகி ஷிரினுக்கு தமிழ் தெரியாது, ஆனாலும் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். தெளிவா சொல்லிட்டா இசையமைப்பாளர் ஷபீர் சிறப்பான இசையை கொடுப்பார்.” என்றார்.

 

பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தை வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related News

5004

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery