Latest News :

‘அயலான்’ பொங்கல் வெளியீடாக மாறியது ஏன்? - நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்
Saturday October-07 2023

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பிரமாண்டமான அறிவியல் தொடர்பான திரைப்படமாக உருவாகும் படம் ‘அயலான்’. 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோடப்படி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

 

வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துக்கொண்டு டீசரை வெளியிட்டனர். டீசர் வெளியாகி சில நிமிடங்களில் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்தது.

 

நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ”’அயலான்’ படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லி இருந்தோம். ஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு இன்னும் சில காலம் இருந்தால் இன்னும் சிறப்பாக புதிய விஷயங்களை சேர்க்கலாம் என கிராபிக்ஸ் பணிகள் செய்யும் நிறுவனம் கேட்டார்கள். அதனால், பொங்கலுக்கு வெளியீட்டை மாற்றினோம். நீங்கள் தற்போது டீசரில் பார்க்கும் ஏலியன் வேர்ல்ட் இப்போது உருவாக்கியது. தீபாவளியை விட பொங்கல் விடுமுறை இன்னும் சிறப்பாக உள்ளது. 'இன்று நேற்று நாளை' படத்தை திருச்சியில் பார்த்த போது ரசிகர்கள் டைம் மிஷின் என்ற கான்செப்ட்டை அவ்வளவு ரசித்துக் கொண்டாடினார்கள். அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரவிக்குமாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதன் பிறகு அவரை சந்தித்து கதை கேட்டேன். இந்த ஏலியன் கதையை ஐந்து நிமிடங்கள் சொன்னார். உடனே சம்மதம் சொன்னேன். 

 

முதல் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தில் அவருடன் இணைந்தேன். அவர் தமிழ் மீடியத்தில் படித்தவர். கல்லூரி படிப்பை கரஸில் முடித்தார். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துவிட்டார் ரவிக்குமார். படத்தை 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். அவ்வளவு பிரிப்பரேஷன். இந்தப் படத்திற்கு ரஹ்மான் சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் கதைக் கேட்டு உடனே சம்மதம் சொன்னார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரஹ்மான் சாருக்கு என்ன சம்பளம் கொடுத்து கமிட் செய்தோமோ அதையே இப்போது வரை ஓகே சொல்லி எங்களுக்காக புதிய டியூன் இப்போது வரை போட்டுக் கொடுத்தார். அது அவருடைய பெருந்தன்மை. டீசர் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். 

 

இந்தியாவில் லார்ஜ் ஃபார்மேட் கேமராவில்  எடுத்த முதல் படம் 'அயலான்'தான். நீரஜ் சார், முத்துராஜ் சார் என பல ஸ்ட்ராங் டெக்னீஷியன்ஸ் இதில் உள்ளார்கள். இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள் தான் என சொன்னார்கள். அதனால், எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என யூடியூப் தலைப்பு வைத்து விடாதீர்கள். அதுபோன்ற கன்செப்ட் என்று தான் சொன்னேன். படத்தில் 4600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னீஷியன்ஸூம் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். சிஜி கம்பெனி அம்பத்தூரில் தான் உள்ளது. இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படம் முடித்தவுடன் நானும் ரவிக்குமாரும் சேர்ந்து இன்னொரு படம் செய்கிறோம். ஒருக்கட்டத்தில் படத்திற்கு நிதி தேவை என்ற நிலை வந்த போது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார். இதுபோன்ற சிறந்த வி.எஃப்.எக்ஸ்ஸோடு சிறந்த படம் இந்தியாவில் இல்லை என்பதை நம்பிக்கையோடு சொல்வேன். ’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்” என்றார்.

 

Ayalaan Teaser Launch

 

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “’அயலான்’ படத்திற்கு காத்திருந்த காலக்கட்டம் குறித்து அனைவரும் பேசினார்கள். இதை மிதமாக கடந்து வர உதவியர்கள் என் குடும்பமும் நண்பர்களும்தான். இதற்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையில்தான் இத்தனை வருடம் பல சவால்களைக் கடந்து பயணித்து வந்தோம். நீரவ் ஷா, முத்துராஜ் சார் போன்ற பெரிய மாஸ்டர்கள் இந்தப் படத்தில் வேலை பார்த்துள்ளது எனக்குப் பெருமை. அவர்கள்தான் என்னை வழிநடத்தினார்கள். ரஹ்மான் சார்தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருந்தது. ரஹ்மான் சார் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். ரஹ்மான் சாரின் ரசிகன் நான். அவர் என் படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சி. வி.எஃப்.எக்ஸ். பிஜாய்க்கு நன்றி. நடிகர்கள் யோகிபாபு, பாலசரவணன், ஷரத் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய இயக்குநர் குழுவுக்கும் நன்றி” என்றார். 

 

நடிகை இஷா கோபிகர் பேசுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் கோலிவுட்டில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. இயக்குநர் ரவிக்குமாருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. நீங்கள் இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு நிச்சயம் படம் சூப்பராக இருக்கும். என்னையும் இந்தப் படத்தில் அழைத்ததற்கு நன்றி”. என்றார்.

 

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான் அது வரலாறாக மாறும். அதுபோன்ற ஒரு பாதையில் வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அதுபோலதான் ‘அயலான்’ படமும் கஷ்டப்பட்டு வந்துள்ளது. நிச்சயம் வெற்றி பெறும். ’மாவீரன்’ போன்ற படத்தை எடுத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். சமூக கருத்துகளை முன்னிறுத்தும் இதுபோன்ற படங்களை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் எடுத்து நடிக்க வேண்டும். இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ரவிக்குமார், ரஹ்மான், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.

 

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், “இதுபோன்ற வெவ்வேறு ஜானர்களில் படங்கள் எடுப்பது அரிது. அதனால், இயக்குநர் ரவிக்குமார் இந்த கதையை சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் என்பதையும் தாண்டி சக பாடலாசிரியராக சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சி. ரஹ்மான் சார், விவேக் சார் இவர்களுடன் பணிபுரிந்தது கூடுதல் மகிழ்ச்சி”. என்றார்.

 

எடிட்டர் ரூபன் பேசுகையில், “’அயலான்’ படம் இன்னும் முடியவில்லை. வேலை போய்க்கொண்டுதான் இருக்கிறது. சினிமாவில் இன்று நிறைய ஜானர்ஸ் வருகிறது.  இந்த ஜானர் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிதான், ரவி செய்துள்ளார். அவரின் பொறுமைக்கு மிகப்பெரிய நன்றியும் மரியாதையும். இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்த சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நன்றி. இந்த டீசர் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடிட் செய்தது. பொறுமையாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றி. ஹாலிவுட் இயக்குநர்கள் போல ரவியும் எட்டு வருடமாக இந்தப் படம் செய்துள்ளார். படம் இப்போதும் புதிதாக உள்ளது. எல்லோருக்கும் நன்றி”. என்றார்.

 

ஃபேன்தம் சி.ஈ.ஓ பிஜாய் பேசுகையில், “’அயலான்’ படத்தை உங்கள் அனைவரிடமும் காட்டுவதற்காக ஏழெட்டு வருடங்களாக் காத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் சார் இல்லாமல் இந்தப் படம் சாத்தியம் இல்லை. ‘இன்று நேற்று நாளை’ படம் முடிந்த சமயத்தில் இதை ஆரம்பித்தோம். ஒவ்வொரு பரிமாணத்திலும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளோம். ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தைக் கொண்டு வர முயற்சி செய்தோம். இந்திய சினிமாவில் இப்படி ஒரு படம் வெளிவரவில்லை என இதன் தரத்தை பல ஹாலிவுட் கம்பெனி பாராட்டியுள்ளது” என்றார்.

Related News

9281

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...