Latest News :

”இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா?” - ஆர்யாவின் ‘தி வில்லேஜ்’ பிரமிப்பு
Friday November-17 2023

பல புதுமையான இணையத் தொடர்களை வெளியிட்டு வரும் பிரைம் வீடியோவி அடுத்த வெளியீடாக உருவாகியிருக்கிறது ‘தி வில்லேஜ்’. நடிகர் ஆர்யா நடித்திருக்கும் முதல் இணையத் தொடரான இதனை மிலிந்த் ராவ் இயக்கியிருக்கிறார்.  தமிழ் ஒரிஜினல் இணையத் தொடராக உருவாகியுள்ள இத்தொடர் வரும் நவம்பர் 24 ஆம் தேதி முதல் அமேசான் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.

 

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்னன் தயாரித்திருக்கும் ‘தி வில்லேஜ்’ இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

முதல் முறையாக இணையத் தொடரில் நடித்திருப்பதோடு, ‘தி வில்லேஜ்’ தொடர் பற்றி பேசிய நடிகர் ஆர்யா, “அபர்ணா மேடம் இல்லாமல் அமேசான் ப்ரைமில் எந்த புராஜக்டும் ஓகே ஆகாது. அவர் இதை ஓகே செய்திருக்கிறார் அதுவே பெரிய விசயம். இங்கு நிறைய ஒரிஜினல்ஸ் வர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. மிலிந்த் இந்தக் கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷுவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு  எடுக்க முடியுமா?, சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள், மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார், இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. 3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிஸோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார்.  விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.

 

பிரைம் வீடியோ இந்தியா & தென்கிழக்கு ஆசியா, தலைவர் அபர்ணா புரோஹித் பேசுகையில், “பிரைம் வீடியோ மூலம் தி வில்லேஜ் சீரிஸை உங்கள் முன் அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸ் மூலம் எங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல உள்ளோம். இந்த சீரிஸ் ஒரு மறக்க முடியாத பயணம். மிக உணர்வுப்பூர்வமான பயணம். 4 வருடங்கள் முன் ஆரம்பித்தது. முழுதாக எழுதி முடிக்க 2 வருடங்கள் ஆனது. கோவிடை கடந்து இது முழுதாக உருவாக ஆரம்பித்த தருணத்தில், ஆர்யா சார் ஓகே சொன்ன பிறகு இந்த சீரிஸ் உண்மையிலேயே மிகப்பெரியதாகிவிட்டது. பொதுவாக ஹாரர் சீரிஸ் இங்கு யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் இது உங்களுக்கு கண்டிப்பாக மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படக்குழு அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள்.” என்றார்.

 

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசுகையில், “இது தமிழுக்கு மிகவும் புதிது. கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. ஆர்யா சாருக்கும் மிகப்புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக,  நம் மொழியில் உருவாக்கியுள்ளோம். முழுக்க நைட் கால் ஷீட்  தான் அதனால் எல்லோரும் ரொம்ப கஷ்டபட்டு உழைத்தனர். நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இசை இந்த சீரிஸிற்கு மிக முக்கியம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டாகாசமான  இசையை தந்துள்ளார். விஷுவலும் நன்றாக வந்துள்ளது ஒளிப்பதிவாளருக்கு நன்றி. தொழில் நுட்பக்குழு மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மிக்க மகிழ்ச்சி, நான்கு வருடங்கள் முன்பு மிலிந்த் சார் இதைப்பண்ணலாம் என்றார். அப்போது ஆரம்பித்த பயணம் அபர்ணா மேடம் சொன்னது போல், இந்தக்கதை எழுதவே 2 வருடம் ஆனது. வேறு வேறு இடத்தில் நடக்கும் பல கதைகள், அதை ஒன்றிணைக்கும் மையப்புள்ளி எது, எப்படி என்பது தான் சுவாரஸ்யம். ஆர்யா சார் வந்த பிறகு தான் இது பெரிய படைப்பாக மாறியது. இந்த படைப்பை பொறுத்தவரை, மிலிந்த் மற்றும் எங்களின் பார்வையும்,  கதையின் மீதான நம்பிக்கையும்  தான்  இதில் நடிக்க காரணம் என்றார் ஆர்யா,  அவருக்கு நன்றி. அமேசான் யூஎஸ் போலவே இங்கேயும், அவர்கள் முழுமையான ஈடுபாட்டோடு, உழைத்தார்கள். பெரும் ஆதரவு தந்தார்கள்.” என்றார்.

 

The Village Trailer Launch

 

நடிகை பூஜா ராமசந்திரன் பேசுகையில், “தமிழில் நீண்ட காலம் கழித்து, நான் திரும்ப வந்திருக்கிறேன், மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எப்படி மிலிந்த் இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது, இம்மாதிரி பாத்திரம் செய்ய வேண்டும் என்பது கனவு, எனக்கு இந்த பாத்திரம் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி.  நான் கர்பமாகும் முன் வாய்ப்பு வந்தது. நிறைய ஆக்சன் காட்சிகளில் நடித்தேன் மூன்று மாதத்தில் எடுத்து விடுங்கள் என்று டைரக்டரிடம் கேட்டேன்,  அவர் செய்து தந்தது மகிழ்ச்சி. பொதுவாக நைட் ஷூட் எடுப்பது கஷ்டம் இது அதை விட கஷ்டம் ஆனால் மிலிந்த் சார் செம்ம கூலாக ஹேண்டில் செய்தார். இந்த சீரிஸில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. எல்லோரும் கஷ்டப்பட்டுள்ளார்கள் சீரிஸ் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், “இந்த சீரிஸில் ரொம்ப ஈஸியாக இருந்து நடித்தது நான் மட்டும் தான். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போடுவது நான் தான், அதை செய்வது அர்ஜூன். இயக்குநரின் உழைப்பு மிகப்பெரியது.  எல்லாவற்றையும் அருமையாக ஒருங்கிணைத்துள்ளார். அமேசான் எங்கள் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொண்டார்கள்,  நான்  எல்லாம் ஏசி  ரூமில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஷீட் செய்தேன், மற்றவர்கள் காட்டுக்குள் பயங்கர கஷ்டபட்டிருக்கிறார்கள் அதைக்கேட்கும் போது தான் தெரிகிறது.  இது தமிழுக்கு மிகப்பெரிய புதுமையான சீரிஸ், உங்களுக்குப் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் அர்ஜூன் சிதம்பரம் பேசுகையில், “என்னை,  நேர்கொண்ட பார்வை, பொன்னியின் செல்வன்  போன்ற படங்களில் வேறு ரூபத்தில் பார்த்திருப்பீர்கள், இதில் புதுவிதமாக பார்ப்பீர்கள். இது மிகப் புது அனுபவமாக இருந்தது. ஆர்யா கூட ஒரு சீனில் நடித்துள்ளேன் அதிலும் அவர் பின்னிவிட்டார்.  அது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், எனக்கு படத்தில் எந்த வித சிரமமும் இல்லை நடக்க கூட தேவையில்லை,  வீல் சேரில் இருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் அப்படி தான் அமைந்தது , நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்தாலும் நடிக்காவிட்டாலும் இயக்குநர் தான் பொறுப்பு,  அனைத்தும் அவரைத் தான் போய் சேரும், இந்தத் தொடர் வெளியாவதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகர் ஜான் கொக்கன் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம், என் குரு அஜித்குமாருக்கு வணக்கம், இந்த சீரிஸ் எனக்கு புதுமையான அனுபவம். சர்பாட்டா பரமபரை படத்திற்கு பிறகு ஆர்யா கூட  மீண்டும் இதில் நடித்துள்ளேன், இதிலும் சண்டை போட்டிருக்கிறோம். என் பொண்டாட்டி கூட சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. இக்கதையில் மியூடண்டாக நடித்தவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் காஸ்ட்யூமே 20 கிலோவுக்கு மேல் இருக்கும், அதில் ப்ராஸ்தடிக் மேக்கப் வேறு போட்டு நடித்தார்கள். சண்டைக்காட்சிகள்  பயங்கரமாக உழைத்து எடுத்துள்ளார்கள். நீங்கள் இதுவரை பார்க்காத புதிய அனுபவமாக இந்த சீரிஸ் இருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில், “நான் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அதிக  நேரம் படப்பிடிப்பு நடந்தது, அப்போதே இயக்குநர் குறித்து தெரிந்துவிட்டது. நான் சீனில் நன்றாக பேசி நடித்த பிறகு, மீண்டும் சாதாரணமாக ஒன் மோர் என்று கேட்பார்.  நான் எனக்கு மட்டும் தான் இப்படி செய்கிறார் என்று தான் நினைத்தேன்,  ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் இதே நிலைமைதான், அனைவருமே பல வருடம் அனுபவம் நிறைந்தவர்கள் ஆனால் அனைவரிடமும் இயக்குநர் ஒன் மோர் கேட்பார். திரையில் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார்,  அதை யாரையும் கோபப்படுத்தாமல், மகிழ்ச்சியாக முகத்தை கொண்டு,  எங்களிடம் வேலை வாங்கிவிடுவார்.  மிகத்திறமையான இயக்குநர். இந்த சீரிஸ் புதுசாக இருக்கும்,  உங்கள் அனைவருக்கும் ஒரு ஆச்சர்யத்தை கொடுக்கும். கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகை கலைராணி பேசுகையில், “என்னோட முதல் வெப் சீரிஸ் அமேசானுக்கும் டைரக்டருக்கும் நன்றி. எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், நான் எல்லோரையும் விட ஃபர்ஸ்ட்டாக போக வேண்டும், லாஸ்ட்டாக வர வேண்டும், மேக்கப் போடவே 2 மணி நேரம் ஆகி விடும். மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள், எப்போதும் அருகிலேயே இருப்பார்கள். மிக்கடினமாக உழைத்துள்ளார்கள். இயக்குநர் என்னை நேரில் வந்து பார்த்து, முழுக்கதையும் சொன்னார் அப்போது அவர் இயக்கத்தில் நயன்தாரா படம் வந்திருந்தது, எனக்கு பிடித்த படம், உடனே ஆர்வத்தில் அவரை சந்திந்தேன். எனக்கு கதை பிடித்திருந்தது, நான் எப்படி பேச வேண்டும் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லித்தாந்தார்கள். நான் இதுவரை நடிக்காத பாத்திரம், இப்படி ஒரு சீரிஸ் பார்த்திருக்க மாட்டீர்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார். 

 

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவரின் போராட்டக் கதையைச் சொல்லும் இந்த திகில் தொடர் ‘தி வில்லேஜ்’ நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில்,  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாக உள்ளது.

Related News

9346

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery