Latest News :

’கொட்டுக்காளி’ நம்ம மக்களுக்கான முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் சூரி
Thursday August-08 2024

‘விடுதலை’, ‘கருடன்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

 

எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், நடிகர் சூரி மற்றும் நடிகை அன்னா பென் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

Kottukkaali

 

படம் குறித்து நடிகர் சூரி கூறுகையில், “’விடுதலை’ மற்றும் ‘கருடன்’ படங்கள் ஒரு நடிகராக எனக்கு எப்படி பெயர் வாங்கி கொடுத்ததோ அதை விட பெரிய பெயரை ‘கொட்டுக்காளி’ பெற்று தரும். அப்படிப்பட்ட கதைக்களம் கொண்ட படம் இது. கதைக்களம் மிகவும் புதிதாக இருப்பதோடு, இப்படி ஒரு படம் நம்ம மக்களுக்கு தேவை, அனைவருக்கும் முக்கியமான படமாகவும் இருக்கும்.

 

’விடுதலை’ மற்றும் ’கருடன்’ படங்கள் வசூலித்தது போல் இந்த படமும் வசூலிக்குமா? என்றால், அந்த விசயத்தை இதனுடன் ஒப்பிடக்கூடாது, படம் வெளியான பிறகு இதை மக்களும் புரிந்துக்கொள்வார்கள். இந்த படம் வசூல் ரீதியாக எப்படி வருகிறது என்பதை விட மக்கள் மனதில் நிச்சயம்  இடம் பிடிப்பதோடு, தனி வரவேற்பும் பெறும். இப்படி ஒரு சம்பவம் அனைத்து இடங்களிலும் நடந்திருக்கும். இதை நாம் பார்த்திருப்போம், அதை கடந்தும் வந்திருப்போம், ஆனால் படமாக இந்த கதைக்களம் இதுவரை வந்ததில்லை, இது வர வேண்டிய ஒரு களம். இதை என்னிடம் இயக்குநர் சொன்னவுடன், இதில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதோடு, இதில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன், இப்படி ஒரு படைப்பு மிக அவசியமானது.

 

படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் எனக்கு அதிகாலை 5 மணியளவில் போன் செய்தார், அவர் சொன்ன வார்த்தைகளை நான் இங்கு சொன்னால் அதிகமாக இருக்கும். ஆனால், அவர் சொன்னது “உங்களை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது, ஒரு நடிகராக விடுதலை படத்தை விட இந்த படம் உங்களை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்” என்றார். மேலும், பலமுறை படத்தை நான் பார்த்தேன், உங்கள் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது, என்றார். அவருடன் அவரது மனைவி, அம்மா ஆகியோரும் படம் பார்த்தார்கள், அவர்களும் என் நடிப்பும், படமும் சிறப்பாக இருப்பதாக சொன்னதாக சொன்னார். இயக்குநர் அமைதியாக இருந்துக்கொண்டு இப்படி ஒரு படம் செய்துவிட்டாரே, என்றும் பாராட்டினார்.” என்றார்.

 

காமெடி நடிகராக இருந்த நீங்கள் இன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் நாயகனாகியிருப்பது எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு பதில் அளித்த சூரி, “இந்த இடத்தை நான் எதிர்பார்த்ததில்லை. விடுதலை படம் கூட நான் எதிர்பார்க்காதது தான். காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாகி ’விடுதலை’, ’கருடன்’ போன்ற படங்களில் நடித்துவிட்டு, ’கொட்டுக்காளி’ போன்ற படத்தில் நடித்திருப்பது, அதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்றிருப்பது எல்லாம் சினிமாவில் நான் நேர்மையாக பயணித்ததால் கிடைத்தது என்று நினைக்கிறேன். இது அனைத்தும் எனக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு, ஒரு நடிகராக பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.” என்றார்.

 

anna ben in kottukkaali

 

படம் முழுவதும் வசனம் பேசாத கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை அன்னா பென், “கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அதனால் தான் ஒப்புக்கொண்டேன். இது ரொம்ப புதிய முயற்சியாக இருந்தது. கலாச்சாரம் சம்மந்தமான கதைக்களம் தான், மதுரை, மொழி என்று குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை பற்றி படம் பேசினாலும், இந்த கதை சர்வதேச அளவிலானது. அதனால் எந்த மொழியில் எடுத்தாலும் இந்த படம் மக்களை சென்றடையும். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதோடு, அவர்களுக்கான தனித்துவமும் படத்தில் இருக்கிறது. இயக்குநர் வினோத்ராஜ் என்னிடம் கதை சொல்லும் போதே நான் நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். பொதுவாக நான் கதை கேட்டால் ஒரு நாள் எடுத்துக்கொண்டு தான் என் முடிவை சொல்வேன், ஆனால் இந்த படத்தின் கதையை கேட்கும் போதே ஓகே சொல்லிவிட வேண்டும், என்று முடிவு செய்துவிட்டேன், அந்த அளவுக்கு கதை வித்தியாசமானதாக இருக்கும்.

 

நான் நடித்திருக்கும் மீனா கதாபாத்திரம் பிடிவாதம் பிடித்த பெண் என்றாலும், அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் வித்தியாசமாக இருக்கும். படம் முழுவதும் பேசவில்லை என்றாலும், உடல் மொழி, முகபாவனை, பார்வை ஆகியவற்றின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். இதற்கான உடல்மொழியை எப்படி செய்வது என்பது தான் எனக்கு சவாலாக இருந்தது, ஆனால் என்னை ஈர்த்த விசயமும் அது தான், அதை சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” என்றார்.

Related News

9938

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery