Latest News :

’தங்கலான்’ திரைப்பட விமர்சனம்

27e745985c55d3a95c4bef0734989ffa.jpg

Casting : Vikram, Parvathy, Malavika Mohanan, Daniel Caltagirone, Pasupathy, Harikrishnan Annadurai, Muthukumar, Arjun Anbudasan, Preethi Karan,

Directed By : Pa.Ranjith

Music By : GV Prakash Kumar

Produced By : Studio Green and Neelam Productions - KE Gnanavel Raja

 

19 ஆம் நூற்றாண்டில், தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வட ஆற்காடு மாவட்டத்தில் கதை நடக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்குடியினர் அனைவரும் தங்களது நிலங்களை மிராசுதாரரிடம் பறிகொடுத்துவிட்டு, அதே நிலங்களில் பண்ணை அடிமைகளாக பணியாற்றிக் கொண்டிருக்க, நாயகன் விக்ரம் தனது சொந்த நிலத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக விவசாயம் செய்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக்கொள்ளாத மிராசுதாரர் சதி செய்து, விக்ரமிடம் இருந்து நிலத்தை பறித்துக்கொள்வதோடு, அவரையும், அவரது குடும்பத்தாரையும் பண்ணை அடிமைகளாக்கி விடுகிறார்.

 

இந்த நிலையில், அப்பகுதியில் தங்கம் இருப்பதாக நம்பும் பிரிட்டிஷ்காரர் ஒருவர் அந்த தங்கத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அந்த பணியில் ஆதிக்குடி மக்களை ஈடுபடுத்த முடிவு செய்கிறார். கிடைக்கும் தங்கத்தில் பங்கு தருவதோடு, தினமும் கூலி, உணவு மற்றும் இருப்பிடம் போன்ற வசதிகளை செய்துகொடுப்பதாக சொன்னாலும், தங்கத்தை தேடி செல்லும் பயணம் ஆபத்தானது என்பதால் அதில் ஈடுபட மக்கள் தயங்குகிறார்கள். ஆனால், பண்ணைகளில் கொத்தடிமைகளாக சுயமரியாதை இன்றி தினம் தினம் செத்துக் கொண்டிருப்பதை விட, நம் வாழ்க்கையை மாற்றி, இழந்த நிலங்களை மீட்பதற்கான வாய்ப்பாக  தங்கம் தேடும் பயணத்தை பார்க்கும் விக்ரம், சாவுக்கு துணிந்து தனது சகாக்கள் சிலருடன் பிரிட்டிஷ்காரர் தலைமையில் தங்கம் தேடி பயணிக்கிறார். அவரது பயணம் வெற்றி பெற்று, அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை உண்மையான வரலாற்றுடன், தனது புனைக்கதையையும், அரசியலையும் சேர்த்து பா.இரஞ்சித் படைத்திருக்கும் பிரமிப்பான படைப்பு தான் ‘தங்கலான்’.

 

தனது ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு களங்களை தொட்டாலும், அதில் ஆதிக்குடிகளின் வாழ்க்கையையும், தனது அரசியலையும் மிக அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் பா.இரஞ்சித், இம்முறை தனது புதிய கற்பனை உலகத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்று புதிய சினிமா அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

 

தங்கலான் என்ற கதாபாத்தில் நடித்திருக்கும் விக்ரம், தான் ஒரு நடிகர் என்பதை மறந்துவிட்டு ஆதிக்குடி மனிதராக உருமாறியிருக்கிறார். தங்கலான் என்ற ஆதிக்குடி விவசாயியாக நிலத்தில் வேலை செய்யும் விதம், அவருடைய தாத்தாவாக தங்கம் எடுக்கும் வயதான தோற்றம் என்று அனைத்து தோற்றங்களிலும் உடல்மொழி, வசன உச்சரிப்பு, உடலமைப்பில் மாற்றம் என காட்சிக்கு காட்சி பிரமிக்க வைக்கிறார். ஒரு கதாபாத்திரத்திற்காக இவ்வளவு பெரிய உழைப்பை கொடுத்ததோடு, அந்த கதாபாத்திரத்திற்கு என்று ஒரு தனித்துவத்தை உருவாக்கி, அதை உலக அளவிலான திரை கதாபாத்திரங்களின் பட்டியலில் சேர்த்திருக்கும் நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது மட்டும் அல்ல, போட்டிக்கு அனுப்பினால் ஆஸ்கார் விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

 

19 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதையில் ஆரத்தியாகவும், 19 ஆம் நூற்றாண்டு கதையில் தங்கத்தை பாதுகாக்கும் பழங்குடியின தலைவியாகவும் நடித்திருக்கும் மாளவிகா மோகனன், விக்ரமுக்கு இணையாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். விக்ரமின் தங்கலான் கதாபாத்திர வடிவமைப்பு எப்படி கவனம் ஈர்க்கிறதோ அதேபோல் அவரது ஆரத்தி கதாபாத்திரமும், அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான நடிப்பும் மிரட்டல்.

 

விக்ரமின் மனைவியாக கங்கம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்வதிக்கு அழுத்தமான கதாபாத்திரம். பேச்சிலும், நடிப்பிலும் கங்கம்மாவாக வலம் வரும் அவர் தனது கணவரிடம் கோபித்துக்கொள்வதும் பிறகு அவரது பரிசத்தில் பரவசமடைவது என்று தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டு பெறுகிறார்.

 

பசுபதிக்கு மிக முக்கியமான வேடம் இல்லை என்றாலும், தங்களது அடிமைத்தனத்தை அறுத்தொழிப்பதற்காக ராமானுஜர் வழியில் பயணிக்க முயற்சித்த ஆதிக்குடிகளை பிரதிபலிக்கிறார். அவரது நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருந்தாலும், அது ஆங்காங்கே நம்மை சிரிக்க வைப்பதால் அதுவும் படத்திற்கு நிறையாகவே பயணித்திருக்கிறது.

 

தங்கத்தை தேடும் பிரிட்டிஷ்காரராக நடித்திருக்கும் இங்கிலாந்து நடிகர் டேனியல், விக்ரமுடன் பயணிக்கும் ஆதிக்குடி மக்கள், மிராசுதாரராக நடித்திருக்கும் முத்துக்குமார் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். 

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் அசுரத்தனமான பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷம் மற்றும் அதிரடிக்கு கூடுதல் வீரியத்தை கொடுத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் இடம்பெறும் காட்சிகளில் பின்னணி இசையின் சத்தம் அதிகமாக இருப்பது கொஞ்சம் குறையாக தோன்றினாலும், “லானே...தங்கலானே...” பாடல் அந்த குறையை மறந்து இசையை கொண்டாட வைத்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமாரின் கடுமையான உழைப்பு அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் ஒளிப்பதிவு குழு மற்றும் சண்டைப்பயிற்சி குழுவின் அபாரமான உழைப்பு காட்சிகளின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, அதை  திரையில் பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், மேக்கப் கலைஞர் பால்தேவ் வர்மா, ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம் உள்ளிட்ட தொழில்நுட்ப ககலைஞர்களின் பணிகள் தங்கலான் உலகத்தை வியக்க வைக்கும் விதத்தில் உருவாக்கியிருக்கிறது.

 

இயக்குநர் பா.இரஞ்சித், எழுத்தாளர்கள் அழகிய பெரியவன் மற்றும் தமிழ் பிரபா ஆகியோர் வரலாற்று பின்னணியைக் கொண்ட ஒரு கற்பனை கதையில், தற்போது தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய ஆதிக்குடிகள் யார்? என்ற உண்மையையும், அவர்களின் பின்னணியையும் உரக்க சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியின் வெற்றியாக புத்தர் சிலையை முனியாக கையாளப்பட்ட விதத்தை சொல்லலாம். ஆனால், அது சிலருக்கு உறுத்தலாக இருந்தாலும், தங்களது அடையாளம் மற்றும் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் ஒரு படைப்பாளியாக தனது வெற்றியை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்.

 

தங்கலான் என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்து அதன் மூலம் தங்கம் தேடி செல்லும் பயணத்தை தனது கற்பனை திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் பிரமாண்டமான ஃபேண்டஸி படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், தங்கத்தை பாதுகாக்கும் பெண் தலைவி ஆரத்தியை சூனியக்காரியாக காட்சிப்படுத்திய விதமும், அவரது குழுவுக்கும், தங்கலானின் மூதாதையர் குழுவுக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் போன்றவற்றின் மூலம் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார்.

 

18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சூனியக்காரியின் பாத்திரம் வருவது சரி, ஆனால் அதன் பிறகும் சூனியக்காரியின் கதாபாத்திரத்தை பயணிக்க வைத்தது ஏன்? என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஆரத்தி என்ற கதாபாத்திரம் தங்கலானின் தாத்தா பார்வைக்கு மட்டுமே சூனியக்காரி, படம் பார்க்கும் பார்வையாளர்களை பொருத்தவரை அவள் தங்கத்தை பாதுகாக்கும் பழங்குடியின தலைவி. அதனால் தான் அந்த கதாபாத்திரத்தை படம் முழுவதும் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், தங்கத்தை பாதுக்காக்கும் பழங்குடியின மக்களுக்கும், தங்கத்தை இவர்களால் மட்டுமே எடுக்க முடியும் என்று நம்பப்படும் ஆதிக்குடிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பை வெளிக்காட்டும் முயற்சியாக ஆரத்தி கதாபாத்திரத்தையும், அவருடைய ஆன்மா தங்கலானுடன் தொடர்ந்து பயணிப்பது போலவும் திரைக்கதை எழுதியிருக்கிறார். ஆனால், இதை சரியாக புரிந்துக்கொள்ளாத சிலர், 19 ஆம் நூற்றாண்டில் வரலாற்றை சொல்லாமல் சூனியக்காரி, பேய், பிசாசு என்று பூச்சாண்டி காட்டுவதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

 

ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் மறைக்கப்பட்ட வரலாற்றை சொல்ல முயற்சித்திருந்தாலும், விக்ரம் என்ற நட்சத்திர நாயகனுக்கான ஒரு படமாகவும், தரமான ஒரு படைப்பாகவும் இயக்குநர் பா.இரஞ்சித் மிக கவனமுடன் திரைக்கதையை கையாண்டிருக்கிறார். அதே சமயம், படத்தில் இடம்பெறும் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்தாலும், ஒரே மாதிரியாக இருப்பது போல் தோன்றுவது, சில இடங்களில் கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பு புரியாமல் போவது படத்தின் குறையாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் அந்த குறையை மறக்கடிக்க செய்துவிடுகிறது.

 

புதிய முயற்சி மற்றும் அதற்கான கடினமான உழைப்பு போன்றவற்றால புதிய உலகத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றிருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், ஆதிக்குடிகளின் வாழ்வியலை அழுக்கு படிந்ததாக மட்டும் இன்றி, வீரம் மிக்கதாகவும், உலகத்தின் உயரிய பொருளுக்கு நிகராகவும் சொல்லியிருப்பதோடு, அதை தனது மேக்கிங் மூலம் பிரமாண்டமான மற்றும் தரமான படைப்பாக கொடுத்ததில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘தங்கலான்’ உலகத்தரத்திலான ஒரு தரமான படைப்பு.

 

ரேக்கிங் 4.5/5

Recent Gallery