Oct 16, 2024 04:00 PM

விஜய் ஆண்டனி நடிப்பில் மீண்டும் ஒரு கிரைம் திரில்லர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் மீண்டும் ஒரு கிரைம் திரில்லர்!

விஜயகாந்த் எத்தனை முறை போலீஸாக நடித்தாலும் சரி, சத்யராஜ் எத்தனை முறை அரசியல் நையாண்டி படங்களில் நடித்தாலும் சரி, ரசிகர்களுக்கு சலிப்பே ஏற்படாது. காரணம், அத்தகைய படங்களுக்கு மிக பொருத்தமாக இருப்பதோடு, அதில் தங்களது நடிப்பு மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் வித்தியாசங்களை காட்டி மக்களை ரசிக்க வைப்பார்கள். அவர்களின் வரிசையில், எத்தனை முறை கொலை மர்மம் மற்றும் கிரைம் திரில்லர் வகை திரைப்படங்களில் நடித்தாலும் அதை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான படமாகவும், அதில் தனது கதாபாத்திரம் மற்றும் நடிப்பை வேறுபடுத்தி காட்டுபவராகவும் வலம் வருகிறார் விஜய் ஆண்டனி.

 

அந்த வகையில், மீண்டும் ஒரு கொலை மர்மம் மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். ’ககன மார்கன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் பிரபல படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

‘அட்ட கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘ஏ1’, ‘மாயவன்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களின் படத்தொகுப்பாளரும், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்காக 2013 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவருமான லியோ ஜான் பால், இப்படத்தை கிரைம் திரில்லராக மட்டும் இன்றி விறுவிறுப்பான புலனாய்வு திரைப்படமாகவும் இயக்கியிருக்கிறார்.

 

‘ககன மார்கன்’ என்றால், சித்தர்களின் அகராதியில் ’காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருளாம். இத்தகைய வித்தியாசமான தலைப்போடு உருவாகியிருக்கும் இப்படமும், வழக்கமான கிரைம் திரில்லராக அல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதை மற்றும் வித்தியாசமான விஷுவல் எபெக்ட்ஸ் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தண்ணீருக்குள் நடக்கும் காட்சிகள் முக்கிய பங்கு வகிப்பதால், அந்த காட்சிகளை பல நாட்களாக மும்பையில் படமாக்கியுள்ளனர். நிச்சயம் இந்த காட்சிகள் ரசிகர்களை வியக்க வைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

Ga Ga Na Maargan

 

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீப்ஷிகா, கலக்கப் போவது யார் புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவா.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை எழுதி இயக்கும் லியோ ஜான் பால் படத்தொகுப்பும் செய்கிறார். ராஜா.ஏ கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

 

‘ரோமியோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதோடு, படத்தின் வெளியீட்டு பணிகளிலும் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.